Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 19 - சாவி
"அடுத்தாற்போல் எங்கே போகலாம்?'' என்று கேட்டாள் பாரதி.
”சொர்க்கத்துக்கு...'' என்றான் ராஜா.
“அந்த 'ரூட்'டுக்கு நம்ம வண்டிக்கு பர்மிட் இல்லீங்க!.......” என்றான் டாக்ஸி டிரைவர் சிரித்துக்கொண்டே.
ராஜாவும் பாரதியும் சிரித்து விட்டனர்.
”டிரைவர்! நீங்க ரொம்பத் தமாஷாகப் பேசறீங்களே! சில டாக்ஸி டிரைவருங்க மூஞ்சியை 'உம்' மென்று வைத்துக் கிட்டிருப்பாங்க. அவங்களைக் கண்டால் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது...'' என்றான் ராஜா.
”எப்பவும் சந்தோஷமா இருக்கத் தெரியணுங்க. எந்த நேரமும் கவலைப் பட்டுக்கிட்டு இறக்கிறவங்களை வாழத் தெரியாதவங்கன்னுதான் சொல்லணும்...'' என்றான் டிரைவர்.
''பலே, பலே! நீ என் கட்சி!'' என்றான் ராஜா.
”எந்தப் பக்கம் போகணுங்க?... டிரைவர் கேட்டான்.
”மவுன்ட் ரோடு பக்கம் தான்..."
"ஆறரை மணிக்குத்தானே சினிமா? இன்னும் ரொம்ப நேரம் இருக்குதே!'' என்றாள் பாரதி.
"அத்தை லைப்ரரியிலிருந்து புத்தகம் வாங்கி வரச் சொல்லியிருக்காங்க. அங்கே அரை மணி நேரம். அப்புறம் ஓட்டல்லே முக்கால் மணி நேரம்... ஆமாம்; நீ அத்தை கிட்டே சினிமாவுக்குப் போறதாச் சொல்லிட்டு வந்தாயா?....”
"...ம்.....”
"அத்தை என்ன சொன்னாங்க?....''
''யாரோடு சினிமாவுக்குப் போகப் போகிறாய் என்று கேட்டாங்க... சிநேகிதிகளோடு போகப் போறதாச் சொன் னேன். 'சரி'ன்னுட்டாங்க...”
“நான் சொல்லலையா? இன்றைக்கு அத்தை நல்ல மூட்லே இருக்காங்க. நீ போய்க் கேளு. உடனே பர்மிஷன் கொடுத்துடுவாங்கன்னு...''
"ஆமாம்; நீங்க இன்றைக்கு லேட்டாக வீட்டுக்கு வந்தால் பிரின்ஸிபால், எங்கே போயிருந்தேன்னு கேட்பாங்களே!....?
”கேட்கட்டுமே...''
"நீங்க என்ன பதில் சொல்லுவீங்க?''
”எங்க கல்லூரியிலே இன்றைக்கு ஆண்டு விழான்னு ஒரு 'டூப்' அடிச்சுட்றேன்....”
”என்னை மட்டும் சினிமாவுக்குப் போறதாக நிஜம் சொல்லச் சொல்லிவிட்டு நீங்க பொய் பேசலாமா?” என்று கேட்டாள் பாரதி.