நீ இப்போது இங்கு வந்திருப்பது தெரிந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார் தெரியுமா அண்ணா ? எழுப்பட்டுமா?....'' என்று கேட்டாள் காமாட்சி.
”வேண்டாம், வேண்டாம்... அதோ அந்தப் பக்கம் படுத்துக்கொண்டிருப்பது யார்? பாரதியா?....” என்று கேட்டார் சேதுபதி.
"ஆமாம்; பாரதியை எப்போதும் தம் பக்கத்திலேயே தான் படுக்கவைத்துக் கொள்கிறார். பாரதியிடம் எவ்வளவு அன்பு தெரியுமா அண்ணா அவருக்கு?...”
"ஓ.. சரி காமாட்சி! நான் போய் வருகிறேன் பார்வதியின் உடம்பை ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள். அதற்காகத்தான் உன்னையும், பாரதியையும் இங்கேயே இருக்கச் சொல்லியிருக்கிறேன்..” சேதுபதியும் காமாட்சியும் பேசியபடியே மாடிப்படிகளில் இறங்கிச் செல்லும் சத்தம் கேட்கிறது.
தன் கண்களில் படர்ந்த நீர்த்துளிகளைத் துடைத்துக் கொள்கிறாள் பார்வதி.
பொழுது விடிந்தது. காமாட்சி ஹார்லிக்ஸ்ட ன் பார்வதியின் அறைக்குள் வரும்போதே, "இன்றைக்கு எனக்கு இட்லி சாப்பிட வேண்டும் போலிருக்கிறது. சாயந்தரம் அஞ்சு மணிக்கு எனக்கு இரண்டு இட்லியும் கொஞ்சம் காரமாகத் தக்காளிப் பச்சடியும் செய்யச் சொல்லி ஞானத் திடம் சொல்லி விடுங்கள்'' என்றாள் பார்வதி.
''அதெல்லாம் சாப்பிட்டால் ஜீரணம் ஆகுமா?”
”பேஷாக ஆகும். எனக்கென்ன ஜூரமா என்ன? ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளி-களுக்குக்கூட இட்லி கொடுக்கிறார்களே!” என்றாள் பார்வதி.
”இட்லி என்றால் என் அண்ணாவுக்கு ரொம்பப் பிடிக்கும்......” என்றாள் காமாட்சி.
''முன்னொரு நாள் கூடச் சொல்லி யிருக்கீங்க. இன்றைக்குச் சாயந்தரம் உங்க அண்ணாவை இங்கே வரச் சொல்லப் போகிறேன். அவர் ஊரில் இருக்கிறாரா?” என்று கேட்டாள் பார்வதி.
”இருக்கிறார்; நான் போன்லே பேசி, அவரை வரச் சொல்லட்டுமா?'' என்று கேட்டாள் காமாட்சி.
''வேணாம். அது மரியாதை இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்திலே நானே அவரைப் போனில் கூப்பிட்டுப் பேசுகிறேன், அதுதான் மரியாதை!'' என்றாள் பார்வதி.
பார்வதி அவருக்குப் போன் செய்தபோது அவருடன் வேறு யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். அரைமணி நேரம் கழித்துப் பார்வதி மீண்டும் டெலிபோன் செய்தபோது சேதுபதியின் குரல் கேட்டது.
"ஓ நீங்களா? வணக்கம், உங்கள் உடல் நிலை பற்றித் தான் இத்தனை நேரம் டாக்டரம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். தங்களுக்குத் துளிக்கூட கவலையே இருக்கக் கூடாதாம். மனத்துக்கு நிம்மதியும் உடலுக்கு ஓய்வும் இருந்தால் ஆறே மாதத்தில் குணமாகிவிடும் என்கிறார் என்றார் சேதுபதி.