Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி
''தங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும் தயவுசெய்து இன்று மாலை இங்கே வந்து போக முடியுமா?” என்று பார்வதி டெலிபோனில் அழைத்தபோது, சேதுபதி ஒரு கணம் ஒன்றும் புரியாமல் திகைத்தார். ’எதற்காக அழைக்கிறாள்? அப்படிப்பட்ட முக்கிய விஷயம் என்னவா யிருக்கும்?' என்ற ஆவலும் பரபரப்பும் அவர் உள்ளத்தில் எழுந்தன. அவரால் இன்னதென்று ஊகிக்க முடியவில்லை. பார்வதியை முதன்முதலாகச் சந்தித்ததிலிருந்து அவர் மன அமைதி இழந்து எந்நேரமும் அவளைப் பற்றியே எண்ண மிட்டுக் கொண்டிருந்தார். அவளை அடிக்கடி சந்திக்கவும் அவளோடு உரையாடிக் கொண்டிருக்கவும் அவர் அந்தரங்கத்தில் அடங்காத ஆர்வம் இருந்து வந்தது. ஆயினும், தம்முடைய இதயத்தில் பொங்கிக் கொண்டிருந்த அந்த உணர்வை வெளியில் காட்டிக் கொள்ளாமல் நீறுபூத்த நெருப்பாக மறைத்து வைத்திருந்தார்.
பார்வதியை நேரில் சந்திக்கும் சமயங்களில் அவருடைய துணிவு, ஆற்றல் அனைத்தும் மறைந்து போய் சின்னஞ் சிறு குழந்தையாகி விடுவார். உள்ளத்தில் பொங்கும் ஆசைகளை யெல்லாம் அடக்கிக் கொண்டு பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசிவிட்டுத் திரும்பி விடுவார்.
பார்வதி அன்று டெலிபோனில் அழைத்தபோது அவர் உள்ளத்தில் மீண்டும் அந்த ஆசை கொழுந்துவிடத் தொடங்கியது. ”ஒரு வேளை இன்று தன் அந்தரங்கத்தை வெளியிடத்தான் அழைக்கிறாளோ?" என்று பரபரப்படைந்தார்.
''இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது. சற்றும் தயக்கமின்றி என் இதயத்தை அவள் அறியச் செய்யப் போகிறேன். அவளாகவே சங்கோசமின்றித் தன் எண்ணத்தை எடுத்துக்கூறும் அளவுக்குச் சூழ்நிலையை உண்டாக்கப் போகிறேன். இவ்வாறு முடிவு செய்து கொண்டவராய் "ஓ! வருகிறேன். அவசியம் வருகிறேன்” என்று பார்வதிக்குப் பதில் கூறினார்.
அன்று மாலை இருவரும் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது சேதுபதி ஒவ்வொரு கணமும் பார்வதியிடமிருந்து வரப்போகும் அந்த வார்த்தைகளை எதிர்பார்த்துக் கொண் டிருந்தார்.
அவர் எதிர் பார்த்தபடியே அவள் பேச்சைத் தொடங்கினாள். திருமணம் பற்றிய பேச்சுத்தான்.
ஆனால், அது அவர்களுடைய சொந்தத் திருமணம் பற்றியதல்ல. ராஜா - பாரதியைப் பற்றியது.
சேதுபதி ஏமாற்றத்தை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. உண்மையில் அவருக்கு அது ஏமாற்றமும் இல்லை. பார்வதியின் அழைப்பு எதற்காக இருக்கும் என்று அவர் பலவாறு யோசித்துப் பார்த்த போதிலும் எந்த ஒரு நிச்சயமான முடிவுக்கும் வந்துவிட-வில்லை.
ஆகவேதான், திருமணம் விஷயம் என்று பார்வதி கூறியபோது அவர் சிறிதும் பரபரப்படையவில்லை. பார்வதி பின் குரலில் உணர்ச்சியோ பரபரப்போ இல்லாமற் போகவே சேதுபதிக்கு உடனேயே விளங்கி விட்டது. மிக அமைதியாகச் சற்று நேரம் மெளனப் புன்னகையில் ஆழ்ந்திருந்தவர், ரோஜா - பாரதியின் சம்மதம் தான் இதில் முக்கியம். திருமணம் செய்துகொள்ளப் போகிறவர்கள் அவர்கள்