"நான் வருகிறேன் காமாட்சி! நேரமாகிறது.... பாரதியை எங்கே காணோம்?” சேதுபதி விசாரித்தபடியே புறப்பட்டார்.
”அவளும் ஞானமும் கீழே படுத்திருக்கிறார்கள் அண்ணா ! ராஜா வெளியே போயிருக்கிறான். அவனுடைய நண்பர் களெல்லாம் சேர்ந்து கொண்டு அவனுக்கு 'டீ பார்ட்டி' வைத்திருக்கிறார்களாம்...''
"அப்படியா? சேதுபதி கீழே இறங்கிப் போய் விட்டார்.
கோடை விடுமுறை தீர இன்னும் ஏழெட்டு நாட்களே இருந்தன. சாரதாமணிக் கல்லூரி அடுத்த திங்களன்று மீண்டும் திறக்கப்பட்டுவிடும். பார்வதிக்குக் கல்லூரியைப் பற்றிய கவலை வந்துவிட்டது. விளையாட்டுப் போல் மூன்று மாதங்கள் ஓடி மறைந்துவிட்டன. இந்த இடைக்காலத்தில் எத்தனை மாறுதல்கள்!
தான் பூரண குணமடைந்து, மறுபடியும் கல்லூரிக்குச் செல்லும் நாளை அவள் கற்பனை செய்து பார்த்துக்கொண் டாள், அந்த நினைப்பில் அவள் உடலெங்கும் ஓர் இன்பம் பரவியது. மூன்று மாத இடைவேளை மிகக் குறுகிய காலம் தான். அதிலும் இரண்டு மாதங்கள் விடுமுறையில் கழிந்து விட்டன. ஆனாலும் அதுவே அவளுக்கு மூன்று யுகங்களாகத் தோன்றி, மீண்டும் கல்லூரியைக் காண்போமா என்ற ஏக்கமே பிறந்துவிட்டது. இதற்கு முன் அவள் கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் தங்கிய நாளே கிடையாது. கல்லூரிக்குப் போய் ஒரு முறை அதைக் கண்ணால் பார்த்துவிட்டு வர வேண்டும் என்னும் பேராவல் அவள் உள்ளத்தை உந்தியது.
”மணி என்ன இருக்கும்? என்று அவள் யோசித்த போதே, கீழே முன் வாசல் ஹாலில் மாட்டப்பட்டிருந்த பிரெஞ்சு நாட்டுக் கெடியாரம் மணி பத்தரை என்பதைக் குளுமையாக ஒலித்து அறிவித்தது.
அப்போதே ராஜா ஸ்கூட்டரில் வரும் ஒலியும் கேட்டது. அவன் வந்ததும் வராததும் வேகமாக மாடிக்கு ஏறி வந்து, ''அத்தை எடம்பு எப்படி இருக்கிறது?” என்று பரிவோடு விசாரித்தான்.
''நான் அதிக நாள் பிழைத்திருப்பேன் என்ற நம்பிக்கை எனக்குப் போய்விட்டது ராஜா!'' என்று பார்வதி கூறியதும் ராஜா துக்கம் தொண்டையை அடைக்க அப்படியெல்லாம் சொல்லாதீங்க அத்தை! நீங்கள் செளக்கியமாகப் பிழைத்து எழுந்து பழையபடி 'ஜம்' மென்று காலேஜுக்குப் போகப் போறீங்க. நான் உங்களைக் காரில் கொண்டுவிடப் போறேன், இது நிச்சயம்'' என்றான்.
''ம்... என்னவோ பார்க்கலாம்'' எனக் கூறிய பார்வதி சற்று நேரம் மெளனமாக இருந்துவிட்டு 'ராஜா' என்று அழைத்தாள்.
"என்ன அத்தை !”
"எனக்குக் கல்லூரியைப் பார்க்க வேண்டும் போல் ஆசையாயிருக்கிறது. தயவுசெய்து