Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 24 - சாவி
ராஜா அத்தையைத் தாங்கி அணைத்துக் கீழே கொண்டு போய் விட்டான். பார்வதிக்கு மூச்சுத் திணறியது. எப்படியோ காரில் ஏறிப் பின் சீட்டில் சாய்ந்துகொண்டாள்.
வாசல் கேட்டைத் தாண்டியபோது செவிட்டுப் பெருமாள் ஒரு மூலையில் சுருண்டு படுத்துக் கிடப்பது கார் வெளிச்சத்தில் பளிச்செனத் தெரிந்தது.
”'அத்தை! இவனுக்கு உன்னைப் பார்க்க வேண்டுமாம். மாடிக்கு ஏறி வர முடியவில்லையாம். அம்மாவுக்கு உடம்பு ஏப்படி இருக்கிறது?' என்று என்னைத் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறான்...''
"நீ என்ன சொன்னாய்?''
”இப்போது பரவாயில்லை' என்று அவனிடம் சொல்லி விட்டேன். இல்லையென்றால் அவன் இருக்கிற நிலையில் மாடிப் படியேறி வந்து எங்காவது விழுந்து வைப்பானே!'' என்றான் ராஜா.
”பாவம், நன்றியின் சின்னம் இவன்!'' என்று இரக்கப் பட்டாள் பார்வதி.
கார், கல்லூரிக் காம்பவுண்ட் கேட்டை நெருங்கிய போது பார்வதி சுற்றுமுற்றும் பார்த்தாள். மிஸஸ் அகாதா ஒற்றைக் காலை விந்தி விந்தி நடந்து வருவது போலவும் பார்வதியைக் கண்டதும் வலது கையை உயர்த்தி, ஹல்லோ குட்மார்னிங் என்று கூறுவது போலவும் ஒரு பிரமை தோன்றியது அவளுக்கு. மிஸஸ் அகாதா -- பாவம் மிக நல்லவள்; கடமை தவறாதவள்'' என்று எண்ணிக் கொண்டாள்.
அடுத்த நிமிஷம் கார் பார்வதியின் ஆபீஸ் அறைக்கு முன்னால் போய் நின்றது. ஓடி வந்து கதவைத் திறப்பதற்கு அங்கே அட்டெண்டர் ரங்கசாமி இல்லை. ஆனாலும் அந்தக் காட்சியைத் தன் கற்பனையால் கண்டு மகிழ்ந்து கொண்டாள் பார்வதி.
'ராஜா! என்னைக் கொண்டு போய் என் அறையில் விடு!”
ராஜா அவளைத் தூக்கிக்கொண்டு போய் மெதுவாக நாற்காலியில் உட்கார வைத்துவிட்டான்.
இழந்ததெல்லாம் திரும்பி வந்துவிட்டது போன்ற ஒரு பெருமிதம் ஏற்பட்டது அவளுக்கு. ஆசையோடு டெலிபோனைத் தொட்டுப் பார்த்தாள். அதைத் தன் கையால் எடுத்துப் பேசி எத்தனை நாளாயிற்று! அதன்மீது புழுதி படிந்து கிடப்பதைக் கண்டு தானே அதைத் துடைக்கப் போனாள். இதற்குள் ராஜா டஸ்ட்டரை எடுத்து வந்து அதைத் துடைத்துவிட்டான்.
பார்வதி மேஜை மீதிருந்த காலிங் பெல்லைத் தட்டி விட்டு அதன் ஒலியைக் கேட்டுச் சிறு குழந்தை போல் சிரித்துக் கொண்டாள். பின்னர், அறை முழுவதையும் ஒருமுறை கண்ணோட்டமிட்டு அனுபவித்துவிட்டு, ”ராஜா! புதிய ஹாஸ்டல் மண்டபத்துக்குப் போகலாம் வா” என்று கூறியவள் அவன் தோளைப் பற்றிக்கொண்டாள்.
ராஜா அத்தையை ஹாலுக்குத் தூக்கிச் சென்றான்.