ஆம்; அவர் கரத்தால் தீண்டிய சரஸ்வதியின் படம் சேதுபதியின் ஆபீஸ் அறையை அலங்கரித்தது. கருத்தால் தீண்டிய பார்வதியின் படம் முன் வாசல் மாலை அலங்கரித்தது.
--------------
முடிவுரை
''ஒரு கதை சொல்கிறேன், கேட்கிறீர்களா? உற்சாகமாகப் பேச்சைத் தொடங்கினார் நண்பர்.
"சொல்லுங்கள் ” என்று நானும் ஆர்வத்துடன் கதை கேட்கத் தயாரானேன்.
''நான் கூறப்போவது ஒரு புதுமையான காதல் நவீனம். மற்றக் காதல் கதைகளோடு இதை ஒப்பிட முடியாது. இது ஒரு தனித்தன்மை வாய்ந்த கதை. இதில் வரும் கதாநாயகிக்குக் கிட்டத்தட்ட நாற்பத்தெட்டு வயதாகிறது. கதாநாயகருக்கு அவளைக் காட்டிலும் ஏழெட்டு வயது கூட இருக்கும். ஒருவரை ஒருவர் அந்தரங்கமாக நேசிக்கிறார்கள். அதன் விளைவாக மனப் போராட்டங்களுக்கும் கொந்தளிப்புகளுக்கும் ஆளாகிறார்கள். இறுதியில் கதாநாயகி இறந்து விடுகிறாள். அவர்களிடையே தோன்றும் உணர்வு, அதைக் காதல் என்றே கூறலாம் - அமரத்துவம் பெற்று விடுகிறது. இதுதான் கதை. எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.
மிகச் சிறந்த கதை என்று பதில் கூறிவிட்டுக் கதையைப்பற்றிய சிந்தனையில் மூழ்கி விட்டேன் நான்.
கதை சொன்னது யார் தெரியுமா ?
கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளைக் கதாபாத் திரங்களாகக் கொண்டு தொடர்கதைகள் எழுதுவதில் வல்லமையும் புகழும் பெற்றுள்ள ’சேவற்கொடியோன்' தான், காதலுக்குரிய வயதைக் கடந்துவிட்ட கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு இவர் கதை எழுத முற்படுவானேன்? சந்தேகம் ஏற்பட்டது. ஆயினும் அதை உடனேயே சொல்லவிட விருப்பமின்றி, மிக உயர்ந்த கதை எழுதுவதற்கு மிகுந்த ஆற்றலும் அனுபவமும் வேண்டும்'' என்றேன்.
இந்தக் கதையை நான் எழுதுவதாக உத்தேசமில்லை. அதற்கு வேண்டிய அனுபவமோ ஆற்றலோ என்னிடம் இருப்பதாகவும் நான் எண்ணவில்லை. இக் கதையைத் தாங்களோ அல்லது ஜெயகாந்தனோதான் எழுத வேண்டும், என்று மிகவும் தன்னடக்கத்தோடு கூறினார் அவர்.
கதையும், அதன் புதுமையும் எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தன. அந்தக் கவர்ச்சி காரணமாக நானே கதையை எழுதுவதாகக் கூறினேன்.
ஆயினும் ”இதை வெற்றிகரமாக எழுதி முடிக்கும் ஆற்றல் எனக்கு உண்டா? என் திறமையில் சேவற்கொடியோன் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற முடியுமா?” என்ற பயம்