மாதிரியே இருந்தார். கழுத்தில், ஏழு பவுன் சங்கிலி போட்டு இருந்தார். சிலர், அந்த சங்கிலியை அவர் மனைவி, அவருக்குக் கட்டிய தாலி என்று கிண்டலாக அல்ல, மெய்யாகவே சொல்வார்கள். கையில் தங்கச் சங்கிலியால் பிணிக்கப்பட்ட ஒரு பாடாதி கடிகாரம். ‘டை’ அடிக்கத் தேவையில்லாத கருமையான முடி. மொத்தத்தில் சொல்லப் போனால், ஆசாமி அழகாகவே இருப்பார்.
அரவை மில்லில் இருந்து நேராக வந்த அவர், மல்லிகாவை பெருமிதமாகப் பார்த்துக் கொண்டு நின்றார். அவர் கண் முன்னேயே, அவர் கண்ணுக்குத் தெரியாமலே எப்படி வளர்ந்து விட்டாள்! எவ்வளவு கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறாள்! ஏதோ, இன்னும் இந்த இருபது வயதிலும், அவரைப் பொறுத்த அளவில், அவள் ஐந்து வயது சிறுமி போலவே தோன்றுகிறாள்.
மல்லிகாவை பாசம் பொங்கப் பார்த்த சொக்கலிங்கம் திடீரென்று, ‘டப்பும்’ டிரம்மும் மோதிய சத்தம் காதைக் குத்த, “நான் சொன்னது... உன் காதுல விழலியாம்மா” என்றார்.
“என்னப்பா சொன்னீங்க?”
“இந்தாபாரு... ஒண்ணு ‘என்ன அப்பா’ன்னு பிரித்துச் சொல்லு... இல்லேன்னா என்ன சொன்னீங்கன்னு மொட்டையாக் கேளு... நீ என்னப்பா என்னப்பான்னு சொல்றதைக் கேட்டால், நீ எனக்கு பாட்டி மாதிரியும் தோணுது... நீ டிரஸ் பண்ணலியாம்மா?...”
மல்லிகா சிரித்துக் கொண்டே சொன்னாள் “நீங்களும் பண்ணவில்லையா? ‘அம்மா’ன்னு பிரித்துச் சொல்லுங்க... இல்லன்னா...”
“சரி, போகட்டும்... உங்கம்மா குளித்து... நீ குளித்து... நான் குளித்து, புறப்படு முன்னால... அங்கே கல்யாணம் முடிந்து ஒரு குழந்தை கூட பிறந்துடும்! நாம் குழந்தையோட காதுகுத்து விசேஷத்துக்குத்தான் போக முடியும். இன்னுமா குளிக்கிறாள்...? குளித்து முடித்துவிட்டு ஏதோ பால்கணக்கு போடுறாள்னு நினைக்கேன்...”
மல்லிகா சிரித்துக் கொண்டே ஏதோ சொல்லப் போனபோது, பார்வதி கொண்டையை ஒரு வெள்ளைத் துண்டால் கட்டிக் கொண்டு, மார்புக்கு மேலே சேலையை சுற்றிக் கொண்டு, வெளியே வந்தாள். கணவனைக் கண்டுகொள்ளாமலே, “மல்லி... நீ போய் குளிம்மா” என்றாள்.
“நான் அப்புறமா குளிக்கேன்.”
“கல்யாணத்துக்கு நேரமாகுது.”
“நான் வரலை... தலை வலிக்குது.”
சொக்கலிங்கம் பதறினார்: “உனக்கு வயசு வளர்ந்த அளவுக்கு மூளை ஏன் வளரல...? சொந்த அக்காவோட கல்யாணம். நீ வராட்டால் நல்லா இருக்குமா... நாலு பேரு என்ன நினைப்பாங்க...”
பார்வதி அவளைப் பெருமையோடு பார்த்துக் கொண்டே, “நீயும் வரணும்மா... இல்லன்னா... நாங்கள் தான் ஒன்னை தடுத்துட்டோமுன்னு சொல்வாங்க... உம்... சீக்கிரம்...” என்றாள்.