இதற்குள் குளியலறையில் இருந்து, “ரெடியாயிட்டீங்களா” என்று கூவிக்கொண்டே வந்த சொக்கலிங்கம், மனைவியைப் பார்த்து, “இந்தக் கம்மலைக் கழட்டிட்டு அவளோட ரிங்கை போட்டுக் கோயேன்... கொப்பரைக்கு வளையம் போட்டது மாதிரி இருக்கும்...! வேணுமானால் காம்பவுண்டு கதவுச் சங்கிலியைக் கழட்டித் தரட்டுமா... அதையும் தங்கச் சங்கிலி மாதிரி போட்டுக்கோ! ஆளைப் பாரு நாற்பது வயதுக்கு மேல உடம்பைக் குறைக்கறதுக்கு பார்க்காமல், நகைகளை கூட்டப் பார்க்கறாள்...”
“நான் வேணுமானால் தடியா இருந்துட்டுப் போறேன். உங்களுக்கு என்ன நஷ்டம்? ஏண்டி இப்படிச் சிரிக்கிற?”
“சிரிக்கலம்மா, அப்பா... அம்மாவை நீங்கள் ஓவரா பேசுறீங்க...”
“நாம இப்போ அவரு கண்ணுக்கு அப்படித்தாண்டி தெரியும்! இவரு இவ்வளவு பேசுறாரே, இவரு காலப் பாரு, குளிச்சாரம். காலுல தண்ணியே படல...”
“தண்ணி போடுற உன் ராமனை விட நான் தேவலடி...”
“என்னம்மா நீங்கள்... அப்பா தமாசுக்கு பேசுறாரு... நீங்கள் சீரியசா எடுத்தால் எப்படி?”
“விளையாட்டு வினையாகும்னு சொல்லுடி.”
“வினை கூட என்கிட்டே விளையாட்டாகும்ன்னு சொல்லும்மா...”
“நான் ஒண்ணும் சொல்லப் போறதுல்ல. அதோ, கார் வந்துட்டு. போயிட்டு சீக்கிரமா வந்துடணும்...”
மூவரும் காரில் ஏறினார்கள்.
மல்லிகா இருவருக்கும் நடுவில் உட்கார்ந்து கொண்டாள்.
உரித்த வாழைத்தண்டு போன்ற கால்கள். ஆமணக்குச் செடியைப் போன்ற சிவப்பும் ஊதாவும் ‘கலந்த’ நிறம். அது, ரத்தச் சிவப்பும் இல்லை; குங்குமச் சிவப்பும் அல்ல. அழகான சிவப்பு. தாமரைத் தண்டு போன்ற கழுத்து, நளினமும், கம்பீரமும் கலந்த பார்வை. எவர் சொல்வதையும், உண்மையிலேயே உன்னிப்பாகக் கேட்பது போல், முதுகை வளைத்து, முகத்தை முன்பக்கமாய் கொண்டு வரும் நேர்த்தி. குட்டையென்றோ, நெட்டையென்றோ சொல்ல முடியாத உயரம். பல்வேறு டிசைன்கள் போட்ட அந்த ‘மோஷி மோஷி’ சேலையில், இரட்டைப் பின்னல்களில் ஒன்று தோளின் முன்பக்கம் தொங்க, சேலைக் கடையின் முன்னால் நிற்கும் மெழுகுப் பெண்ணைப் போல, அதே சமயம் ஆபாசம் இல்லாத கவர்ச்சியுடன், பாலுணர்வைத் தூண்டாமல், கையெடுத்துக் கும்பிட வேண்டும் என்பது போன்ற பாங்குடன் மல்லிகா தோன்றினாள். அவளையே இமை விலகப் பார்த்த திரு-திருமதி சொக்கலிங்கங்கள், ஒருவருக்கு ஒருவர் புன்முறுவலைப் பரிமாறிக் கொண்டே புளகாங்கிதமானார்கள்.