பெயரைக் கூட போட்டிருக்காரு. இவளை எடுத்து வளர்த்த உங்கள் பேரு எங்கேயாவது இருக்கா? ஏன் பேச மாட்டேங்கிறீங்க? அரவ மிஷின் மாதிரி கத்துவீங்களே, இப்போ ஏன் பேசமாட்டேங்கிறீங்க?”
சொக்கலிங்கம் பட்டும் படாமலும் பதில் அளித்தார். “இதனால அவங்களுக்குத்தான் நஷ்டமே தவிர நமக்கில்ல. நாலுபேரு நாலுவிதமாய்ப் பேசப்படாதேன்னு போறோம். அவ்வளவுதான். உங்கள் அண்ணன்மாரு தாழ்த்தின்னோ, இல்லை என் மச்சான் உசத்தின்னோ எதுவும் கிடையாது. எல்லாருமே காலச் சுத்துன பாம்புங்க. டிரைவர், நீ ஏய்ய நாங்க பேசுறதக் கேட்கிறது மாதிரி வண்டியை மெதுவா விடுற? சீக்கிரமா விடுப்பா... இன்னொன்னும் சொல்றேன் கேளுடி. அண்ணன் தம்பிங்களானாலும் சரி, அக்கா தங்கைகளானாலும் சரி, அம்மா வயித்துல இருந்து ஒருவரோடு ஒருவர் சொல்லிட்டுப் பிறக்கல. ஒண்ணா பிறக்கறதுனாலேயே ஒண்ணா ஆயிட மாட்டாங்க. கூடப்பிறக்கறதுனாலேயே கூடி வாழ்ந்துட மாட்டாங்க. உறவை விட, நட்பு இருக்கே, அதுலயும் பால்ய சிநேகிதம் இருக்கே, அதுக்கு இணையாய் எதுவும் ஆக முடியாது. சொந்தக்காரங்கிட்ட உடம்புல ஓடுற ரத்தம் துடிக்கலாம். ஆனால், சிநேகிதங்கிட்ட அந்த உடம்புக்குள்ள இருக்கிற ஆன்மா துடிக்கும். இந்தச் செட்டியாரையே எடுத்துக்கோ... அவரு எங்கே பிறந்தாரோ, நான் எங்கே பிறந்தேனோ, அவரு செட்டியார்ல நாட்டுக்கோட்டையா, வாணியச்செட்டியா, ‘வளையல் செட்டியா’ன்னு கூட எனக்குத் தெரியாது. இருந்தாலும், அவரை விட, எனக்கு நெருக்கமான மனுஷன் யாருமே இல்ல...”
“ஆயிரம் சொல்லுங்க, என் கூடப் பிறந்தவங்க... உங்கள் தங்கை புருஷன் மாதிரி நடக்க மாட்டாங்க... எங்கள் அண்ணனை நாயை நடத்துறதவிட மோசமாய் நடத்துனிங்க. கார்ல ஏறப்போனவரக் கூட முகத்துல அடிச்சதுமாதிரி பேசுனிங்க. அப்போ கூட அவரு கோபப்பட்டாரா? சிரிக்கிறத விட்டாரா...?”
“கோபப்பட வேண்டிய இடத்துல சிரிக்கிறவன் ஆபத்தான மனுஷண்டி. அதோட, ரோஷம் இருந்தால் தான் கோபம் வரும். வேஷம் இருந்தால் சிரிப்புத்தான் வரும்!”
“சரி சாமீ! எங்கள் ஆட்கள் ரோஷங்கெட்டவங்கதான், ஆபத்தானவங்கதான். இவள் அப்பாதான் ரோஷக்காரர், யோக்கியர், போதுமா...?”
“உனக்கு அறிவு இருக்காடி? இவள் நம்ம பொண்ணு. நம்மைத் தவிர வேற யாரையும் நினைக்காத பொண்ணு. நம் மடியிலேயும், தோளுலேயும் புரண்ட பொண்ணு. இவளையும், அந்த குடிகாரனையும் எதுக்காகடி சம்பந்தப்படுத்திப் பேசுற? பாரு, அவள் முகம் போற போக்கை...”
பார்வதி அப்போதுதான் உணர்ந்தவள் போல் திடுக்கிட்டு, மல்லிகாவைப் பார்த்தாள். அவள்