நிர்வாகத் தலைவர், பொருளாளர், துணைப் பொருளாளர், இணைப் பொருளாளர், நிர்வாகப் பொருளாளர் என்று இருபது பேர் பேசி, நேரம் இருந்தால் இன்னும் பத்துப் பேரும் பேச வேண்டும்! இவர்கள் பேசி முடிப்பது வரைக்கும் காத்திருப்பது என்றால் மணமக்களுக்கு, முதல் இரவு வருவதற்கே மூன்று மாதம் ஆகும்.
மணமக்களை வாழ்த்தி, தலைவரும், இதர நிர்வாகிகளும் பேசி முடித்த பின்னர், ஒரு வ.கு.உ. பேச எழுந்தார். மணமக்களுக்கு, தாங்க முடியாத எரிச்சல். பேசி முடித்தவர்களுக்கும், பேசப் போகிறவர்களுக்கும் அதே எரிச்சல். பேசுகிறவர் மட்டும், எவரையும் கண்டு கொள்ளவில்லை. கூட்டத்தினருக்கோ பசித் தொல்லை. சாப்பாடு பக்கத்திலேயே இருந்த போதும், பசி, வயிற்றுக்கு வெளியேயே வந்த போதும், ஒரு பேச்சை - அதுவும் உருப்படாத பேச்சைக் கேட்பது என்றால்...
செவிக்கு உணவு திகட்டியதால், வயிற்று உணவை தியாகம் செய்துவிட்டு, ஒரு சிலர் வெளியே வந்த போது, சொக்கலிங்கம் மனைவி - மகள் சகிதமாக காரில் இருந்து இறங்கினர்.
உள்ளே இருந்து ஓடி வந்த அவருடைய தங்கை செல்லம்மா, “வாங்கண்ணா... கொஞ்சம் முன்னாலேயே வரப்படாதா...” என்று கெஞ்சுவது போலக் கேட்டாள். அண்ணனின் கைகளைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.
பார்வதியல் பொறுக்க முடியவில்லை. “இவரு என்ன மேடையிலா உட்காரப் போறாரு. சீக்கிரமாய் வாரதுக்கு” என்ற போது, மல்லிகா சிரித்துக் கொண்டே, “மேடையில் பேசுறவங்க தான் கடைசியில வரணும். அப்பா... நீங்கள் லேட்டா வந்ததனால, தலைவரா ஆயிட்டிங்க! அதனாலே மேடைல போய் உட்காரணும், இடம் இருந்தால்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.
“ஆமாண்ணா... அவரு அப்போதே உங்களைப் பார்த்துக்கிட்டே இருந்தார்” என்றாள், செல்லம்மா.
செல்லம்மா அவர்களை வரவேற்பது போல், திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே, முன்னால் நடக்க, மூவரும் உள்ளே போனார்கள். கூட்டத்தில் லேசான பரபரப்பு. சொக்கலிங்கத்தின் உதவி தேவைப்படலாம் என்று கருதிய இரண்டு பேரும், அவர் ஒரு காலத்தில் செய்த உதவியை இன்னும் நன்றியுடன் பாராட்டும் ஒருவரும், நாற்காலிகளில் இருந்து எழுந்தார்கள்.
சொக்கலிங்கம் குடும்பத்தினர் உட்கார்ந்த போது செல்லம்மா, அண்ணனைப் பெருமையாகப் பார்த்துக் கொண்டே, கணவனிடம் போய், “அண்ணன் வந்துட்டாரில்ல, போய், ‘வாங்கத்தான்’னு ஒரு வார்த்தை கேளுங்க... போங்க” என்றாள். “போடி! உன் அண்ணன்... தாலி கட்டுற நேரத்தில் வந்துட்டாரு பாரு... காலுல விழுந்து கும்பிடணும்! அவருகிட்ட பணம் இருந்தால் அவருவரைக்கும். நான், ஒரு குதிரை காலுல கட்டுன பணத்துக்குப் பெறுமா...?” என்றார். “அவரு பணக்காரருன்னு உங்களை கூப்பிடச் சொல்லல. உங்கள் பெண்டாட்டியோட கூடப்