பிறந்த அண்ணன். என்னை வருஷத்துல முன்னூற்று அறுபத்தஞ்சு நாளைக்கும் அடிச்சி தொலைச்சிங்க. இன்னைக்காவது, நான் சொல்றத கேட்கப்படாதா? உங்களைத்தான். போய் கூப்பிட்டு, மேடையில் உட்காரவையுங்க. நீங்கள் பெத்த பெண் மல்லிகாவை, எவ்வளவு பேரும் புகழுமா வைத்திருக்கார், பார்த்தீங்களா. போங்க...”
செல்லம்மா மன்றாடினாள்.
பெருமாள், வேண்டா வெறுப்பாக, சொக்கலிங்கத்திடம் போனார்.
“மேடைக்கு வாங்கத்தான்...” என்றார், இவர். “பரவாயில்லை... இங்கேயே இருக்கேன்” என்றார், அவர். பிறகு இவரும் வற்புறுத்தவில்லை. அவரும் எழவில்லை.
“நம்ம மல்லி காலேஜ்ல பேசுறவள் தானே, இங்கே பேசச் சொல்லலாமா?” என்று சொக்கலிங்கம் சொன்ன போது, பார்வதி, அவரை சூடாகப் பார்த்தாள். சொக்கலிங்கம், அடங்கிப் போன போது, அடக்க ஒடுக்கம் இல்லாத பெருமாள், ‘சரிதான் போய்யா...’ என்பது போல் போய்விட்டார்.
மணமகள் சந்திரா, தன் தங்கை மல்லிகாவையே பார்த்தாள். அவள் வருவது வரைக்கும், கணவன் தன்னை ஓரக்கண்ணால் பார்க்கிறானா என்று கவனித்துக் கொண்டு இருந்தவள், இப்போது, தங்கை தன்னை கவனிக்கிறாளா என்று பாசத்தோடு நோக்கினாள். கணவன், தன் முதுகைக் கிள்ளுவது தெரியாமலே - உணராமலே பார்த்தாள்.
மல்லிகாவும், அக்காவையே பார்த்தாள். உள்ளத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்த பாசத் துடிப்பு, அவள் நெஞ்சத் துடிப்பை அதிகமாக்கியது. பிறகு, மணமக்களின் இடத்தில், தானும், சரவணனும் அமர்ந்து இருப்பது போல் ஒரு பிரமை. அமர வேண்டும் என்ற ஓர் ஆசை. இங்கே இருந்த குண்டு குழி வீட்டில் அல்ல; ஆபர்ட்ஸ்பரியில் அல்லது, ராஜேசுவரி கல்யாண மண்டபத்தில் வேண்டாம், சரவணனோடு எந்த இடத்தில் வேண்டுமானாலும் உட்காரலாம்; உட்கார வேண்டும்.
கூட்டத்தின் பெரும்பகுதி, மல்லிகாவையும் பார்வதியையுமே மாறி மாறிப் பார்த்தனர். மல்லிகாவை, கொஞ்சம் அழுத்தமாகப் பார்த்தனர். “எங்கே இருக்க வேண்டியவள், எங்கே இருக்கா... பார்த்திங்களா? ஆனாலும் நல்ல பொண்ணு... கர்வமே கிடையாது.”
மணமேடையில் ‘ம.கு.உ.’ ஒருவர், இடம், பொருள், வயிறு தெரியாமல் பேசிக் கொண்டே போனார். எரிச்சல் தாங்க முடியாமல், மல்லிகா, சரவணனோடு, தன்னை இணைத்துக் கொண்ட இன்பக் கோட்டையைக் கூட சிறிது தகர்த்துக் கொண்டு, கைகளை நெறித்தாள். பேசுபவர் வார்த்தைகள் மோதாமல், முட்டாமல் இருப்பதற்காக காதுகளைக் கூட கைகளால் அடைத்துக் கொண்டாள். பிறகு மேடை அநாகரிகத்தை ஆட்சேபிப்பதற்கு, இது நாகரிகமான எதிர்ப்பு அல்ல