என்று நினைத்தவள் போல், கைகளை எடுத்துவிட்டு முகத்தைச் சுழித்தாள்.
அப்போது, ஒரு மாதத்துக்கு முன்புதான் வயதுக்கு வந்த அவளுடைய இரண்டாவது தங்கை, இரண்டு மூன்று தம்பிகள், அவள் அருகே வந்தார்கள். “அக்கா” என்று அந்த வார்த்தையை வாய் வழியாக மட்டும் விடவில்லை. முகமலர நின்று, கண்கள் விரிய அந்தப் பாசத்தை உதடு துடிக்கக் காட்டினார்கள். செல்லம்மாவும் அங்கே வந்து மகளை, மலைப்போடும், மலையில் ஏறிவிட்ட அலுப்பு கலந்த அமைதியோடும் பார்த்தாள். பெற்ற வயிற்றைத் தடவிக் கொண்டே பார்த்தாள்.
மல்லிகா எல்லோரையும் பொதுவாகப் பார்த்துவிட்டு, லேசாகப் புன்முறுவல் செய்தாள். அம்மாவுக்கு மட்டும், சற்று அதிகமாகப் புன்முறுவல் செய்தாள். அவ்வளவு தான். ஆனால், அவளைப் பார்த்த அந்த ஏழைப் ‘பாசிகள்’ அவளது பாசத்தின் பதில் வெளிப்பாட்டை கண்டுபிடிக்கும் அளவுக்கு மனதைச் சிதறவிடவில்லை. அவளை முழுமையாகப் பார்த்ததால், மல்லிகாவின் பாசக் குறைவு, அவர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இந்தச் சமயத்தில், சொக்கலிங்கம் எழுந்தார். நேரே மேடையைப் பார்த்துப் போனார். வாழ்த்துரை வழங்கியவர், இவர் தாக்க வருகிறாரா, அல்லது மைக்கைப் பிடுங்க வருகிறாரா என்று பயப்படும் அளவுக்கு பாய்ந்து போனார். நேராகப் போய், மணமகளின் கையை எடுத்து, ஆள்காட்டி விரலைத் தூக்கி, ஒரு பவுன் மோதிரத்தைப் போட்டுவிட்டார். மணமகன் கையில், ஒரு நூறு ரூபாய் நோட்டைத் திணித்தார். இந்தப் பரிசை சற்றும் எதிர்பாராத மணமக்கள், மேடையிலேயே எழுந்து அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டார்கள். மணமக்கள் எழுந்ததும், இதுதான் சாக்கு என்று, கூட்டத்தினரும் சொல்லி வைத்தது போல் எழுந்தார்கள். “ஒரு வரைமுறை வேண்டாம்? எவ்வளவு நேரமய்யா வெறும் பேச்சைக் கேட்கிறது? ஒருவனாவது முன்னால் பேசுனவன் சொல்லாத விஷயத்தைச் சொல்றானா? சீச்சீ!”
கூட்டம் எழுந்து, பந்தியில் உட்காரப் போன போது கூட, ம.கு.உ. பேசிக் கொண்டு இருந்தார். இறுதியில், மைக் வலுக்கட்டாயமாக ‘ஆப்’ செய்யப்பட்டது. அவரது பேச்சு, பாதியில் கோவிந்தா! இன்னும் பேச இருந்த பத்துப் பேர்வழியினர் அடியோடு கோவிந்தா.
பேச வேண்டியவர்களைத் தவிர, மற்றவர்கள் நிம்மதிப் பெருமூச்சை விட்டபோது, சொக்கலிங்கம் மனைவியிடம் வந்து “சரி... நான் டாக்சியில் போறேன். செட்டியார் காத்திருப்பார். நீங்கள் சாவகாசமா சாப்பிட்டுட்டு, கார்ல வாங்க” என்று சொல்லிக் கொண்டே, சட்டைப் பித்தானைப் பூட்டினார். புறப்படுகிறாராம்.
மல்லிகாவும் எழுந்தாள்.
“நானும் வரேம்பா. எனக்கு போரடிக்குது. நாளைக்கு காலேஜ்ல டெஸ்ட் இருக்கு. பிளீஸ்...