உன்ன கவனிச்சுக்கிறேன்’ என்று மனதுக்குள் கருவிக் கொண்டே, அந்த மதயானை மாடிப் படிகளில் ஏறியது.
மல்லிகாவிற்கு, அந்த வீட்டிற்குள் இருக்க பிடிக்கவில்லை. மூட்டைப்பூச்சிகள், கடித்த இடங்களை விட்டு விட்டு, ‘பிடித்த’ இடங்களைக் கவ்வின. சந்திரா மல்லிகாவைப் பார்த்துக் கொண்டே, தன் கணவனையும் பார்த்தாள். “நானும் பெரிய இடந்தான்... பெரிய இடத்துக்காரியோட அக்காவாக்கும் நான்” என்று, அவனிடம் சொல்வது போல், கண்கள் விரிந்தன. உதடுகள் லேசாகப் பிரிந்தன.
மூத்த மகளின் பிரச்சினையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டு இருந்த பெருமாளும், மல்லிகாவை பெருமிதத்துடன் பார்த்தார். “இவளாவது நல்லா இருக்கட்டும். எல்லோருக்கும் சேர்த்து இவள் ஒருத்தியாவது நல்லா வாழணும். கடவுளே! அவளை நல்லா வாழ வை.”
அங்கே, எதுவுமே நன்றாக இல்லாததுபோல் தோன்றியதாலோ என்னமோ, மல்லிகா, பார்வதியைப் பார்த்து “வீட்டுக்குப் போகலாம்மா...” என்றாள். பார்வதி, அதைப் பொருட்படுத்தாதது போல, மாப்பிள்ளைப் பையனிடம் குசலம் விசாரித்துக் கொண்டு இருந்தாள். விசாரித்துப் பார்த்ததில், அவன் அவளுக்கு, தொலைவாய்ப் போன நெருங்கிய உறவு என்பது தெரிய வந்தது. அதில் அவளுக்கு மகிழ்ச்சி. மல்லிகாவுக்கோ அதற்கு எதிர்மாறான உணர்ச்சி.
மற்றவர்கள் கேள்விக்குப் பதிலையும், பதிலுக்குக் கேள்வியையும் போட்டுப் பேசிக் கொண்டு இருந்த போது, நொடிக்கு ஒரு தடவை, “வீட்டுக்குப் போகலாம்மா; வீட்டுக்குப் போகலாம்” என்று சிடுசிடுப்புடன், செல்லக் கிறுக்குபோல் முணுமுணுத்துக் கொண்டு இருந்த மல்லிகா, திடீரென்று எழுந்து, “சரி நீங்கள் இருந்துட்டு காலையிலே வாங்க. நான் பஸ்ல போறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்படப் போனாள். உடனே, செல்லம்மா, கண்ணில் பெருக்கு எடுத்து விழப்போன நீரை நிறுத்தி வைத்துக் கொண்டே, “நீயும் இந்த வீட்லதாம்மா பிறந்தே. இங்க இருக்கவங்கெல்லாம் உன் கூடப் பிறந்தவங்கம்மா. கொஞ்ச நேரம் இருக்கப்படாதா” என்றாள்.
அப்படியும் மல்லிகா புறப்படப் போனபோது, அவள் கையை கீழே உட்கார்ந்து கொண்டே பார்வதி இழுத்த போது, பெருமாள், தன்னை மீறிவிட்டார். ‘குழந்தைங்க எல்லாம் எவ்வளவு பாசமாய் பார்க்குதுங்க. மருமகப் பிள்ளை கூட எவ்வளவு மரியாதையாய்ப் பார்க்கிறார். இவளைப் பார்த்ததும், எதுக்கும் மசியாத என் மனங்கூட எப்படி கலங்குது? இவளுக்கு ஏன் புரியல...? புரியாட்டால் போகட்டும்.’
இயல்பிலேயே துடிப்புக்காரரான, நாற்பத்தெட்டு வயது பெருமாள் கத்தினார்: “இவள் எனக்குப் பிறந்திருக்க மாட்டாள். சனியன் போனால் போகட்டும். அவள் கையை விடு, அக்கா. மூதேவி போனால் போகட்டும்...!”