(Reading time: 7 - 13 minutes)
Irulum oliyum
Irulum oliyum

எல்லோரும் வாயடைத்துப் போனார்கள். மேற்கொண்டு ஏதோ பேசப்போன பெருமாள், ஆவேசத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காக, வெளியே போய் நின்றார். பார்வதி, பிரமித்தவளாய், ஆகாயத்தையே பார்த்தாள். செல்லம்மாள் கைகளை நெறித்தாள். பிள்ளைகள் கலங்கிப் போய் நின்றன.

எவரிடம் இருந்தும், இந்த மாதிரியான வார்த்தைகளையோ, அதட்டல்களையோ கேட்டு அறியாத மல்லிகாவிற்கு, முதலில் ஒன்றும் ஓடவில்லை. ஏன்... இந்த ‘ஆளு’ இப்படிப் பேசுறாரு... ஏன் இப்படி மூதேவின்னு சொல்றாரு...?

மல்லிகா, தன் கைகளைப் பிடித்த உண்மை அம்மாவை உதறிக் கொண்டே, மடமடவென்று வெளியே வந்து, காரில் உட்கார்ந்து கொண்டு, குலுங்கி குலுங்கி அழுதாள். உள்ளே இருந்த பார்வதி, அது வரைக்கும் சிரித்துக் கொண்டே பேசியவள், “அவள் போன பிறகு, எனக்கு மட்டும் என்ன வேலை இருக்கு? நாகரிகம் தெரியாத வீட்டுக்கு வந்தால் அவமானந்தான் கிடைக்கும். அவள் வரமாட்டேன்னுதான் சொன்னாள். நான் தான் நாலுபேரு தப்பா நினைப்பாங்களேன்னு கூட்டி வந்தேன். கடைசில, நாலு பேரு முன்னாலேயே அவளை அவமானப் படுத்திட்டிங்க...” என்று சொல்லிக் கொண்டே காருக்குள் வந்து, மல்லிகாவை தோளோடு தோள் சேர்த்து அணைத்துக் கொண்டாள். “காரை எடு தம்பி... இந்த இடத்துக்கு வாரது இதுதான் கடைசித் தடவை...” என்று அவள் கத்த, கார், கத்திக் கொண்டே ஓடியது.

நடைவாசலில் நின்று, நடப்பதை நம்பாதவர்கள் போல் கவனித்துக் கொண்டு இருந்த செல்லம்மாவும், அவள் பெண்டு பிள்ளைகளும், கட்சி பிரிந்து விவகாரத்தை வாதாடப் போனார்கள். இதற்குள், குழாய்ப் பக்கமாக நின்ற பெருமாள் அங்கே வந்து, “எல்லாம் உன்னால வந்த கோளாறுடி. தத்து கொடுக்காதடி... கொடுக்காதடின்னு எவ்வளவோ தடவை சொன்னேன்; நீதான் கேட்கல. இப்போ நான் பெத்த மகளே... ஏன் பெத்தோம் என்கிறது மாதிரி நடந்துக்கிறாள். இனிமேல், மகளைப் பார்க்கப் போறோம்னு போ... அப்புறம் பாரு வேடிக்கையை... ஒரு கையையாவது, காலையாவது ஒடிக்காட்டால் ‘என்னடா நாயே’ன்னு கேளு...” என்றார்.

தொலைவில் போன காரையே செல்லம்மா வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள். கணவனைப் பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியும். மீறிப் போனால், சொன்னபடி செய்யக்கூடிய அரிச்சந்திரன், அவர்.

செல்லம்மா மனதுக்குள்ளே புலம்பினாள்.

‘நான் பெற்ற என் செல்ல மகளோட பழகத்தான் முடியல. இனிமேல் பார்க்கவும் முடியாதோ? கண்ணை கண்ணே பார்க்க முடியாதாம். இனிமேல், என் கண்ணை என் கண்ணால பார்க்கக் கூட முடியாதோ... முடியாதோ...’

--------------

தொடரும்

Go to Valarppu magal story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.