பாதாம் பருப்பு வசதிகளை நிறுத்தியதோடு, இரவில் தலைவலி என்று சாக்கு சொல்லி, புருஷனை பட்டினி போட்டாள். சொக்கலிங்கம் சரியானார். ஆனால் எப்படியாவது ஒரு பிள்ளை வேண்டும் - எந்தப் பிள்ளையையாவது எடுத்து வளர்க்க வேண்டும் என்று விரும்பினார்.
விவகாரத்தை, தங்கை சொல்வதற்கு முன்பாகவே, ‘அரவை மில்’ ஒற்றர்கள் மூலம் புரிந்து கொண்ட, பார்வதியின் சகோதரர்கள், தத்தம் பிள்ளைகளைக் காட்டி, “இந்தா பிடி” என்றார்கள். யார் பிள்ளை தத்துக்குப் போவது என்ற விவகாரத்தில் அந்த சகோதரர்களே, ஒருவருக்கொருவர் மனங்கோணி, அடிக்காத குறையாகப் பேசிக் கொண்டார்கள். இறுதியில், தங்களுக்குள்ளேயே சமாதானப்பட்டு, தங்களின் அக்காள் பிள்ளையான ஆறு வயது ராமனைக் காட்டி “இந்தாங்க...” என்றார்கள்.
சொக்கலிங்கம் யோசித்தார். மைத்துனன்மார்கள், தனது திரண்ட சொத்துக்களைத் திரட்ட நினைத்தே, இப்படி உருப்படாத பிள்ளைகளைக் காட்டுவது போல் தோன்றியது. அதோடு, மறுமணம் என்ற யோசனையை யாரோ சொல்ல, இவரையே, “அடிப்போம் - பிடிப்போம்” என்ற பயல்கள். இவன்களிடம் தத்துகித்து எடுத்தால், அப்புறம் கழட்டிக்க முடியாது. ஜென்மாந்திர தண்டனைக்குச் சமமானது. அவருக்குத் தங்கையை கண்ணால் பார்க்காமல் இருக்க முடிந்ததே தவிர, உள்ளத்தால் நேசிக்காமல் இருக்க முடியவில்லை. அவளது இரண்டாவது மகளான இந்த மல்லிகா மீது அவருக்கு அளவற்ற பாசம். அவள் பிறந்த பிறகு தான், ஜோதிடர் ஒருவர் சொன்னது போல், தாய் மாமனான தனக்கு, யோகத்திற்கு மேல் யோகம் அடிப்பதாக நம்பினார். தங்கையின் வீட்டுக்குப் போய் மூன்று வயதுக்கேற்ற லாவகத்துடன், மான் குட்டி மாதிரி கவர்ச்சியாய், மீன் குட்டி மாதிரி சுறுசுறுப்பாய் விளங்கிய மல்லிகாவைக் கேட்டார். தங்கைக்காரியோ, தன் மகளைத் தர முடியாது என்பதை தயக்கத்தோடு வெளியிட்ட போது, “உன் பிள்ளை என் பிள்ளை இல்லியா? எப்படியோ... ஒருவரை ஒருவர் பாராமல் இருக்கும்படியாய் ஆயிட்டுது. உன் பிள்ளையைப் பார்த்தாவது, உன்னைப் பார்க்கிற ஆறுதல், எனக்கு வேண்டாமா?” என்று அவர் கேட்டபோது, செல்லம்மாவால், தாள முடியவில்லை. “இவள் பிறக்கதுக்கு முன்னாலேயே நாம் பிறந்தவங்க அண்ணா” என்று சொல்லிக் கொண்டே மல்லிகாவை, அவரிடம் நீட்டினாள்.
சொக்கலிங்கம், நேராக வீட்டுக்கு வந்து, மனைவியிடம் குழந்தையை நீட்டினார். அப்புறந்தான், அவளுக்கு விஷயமே புரிந்தது. ஆரம்பத்தில் எதிர்ப்புத் தெரிவித்தாள்; அசந்து போன அண்ணன்களின் பேச்சைக் கேட்டு, சில சமயம் குழந்தையை அடித்திருக்கிறாள். சொக்கலிங்கம் குழந்தையை வைத்துக் கொஞ்சும் போது, பொறாமை கூட ஏற்பட்டிருக்கிறது என்றாலும் குழந்தையின் மேலான சிரிப்பில், கள்ளங்கபடமற்ற கையாட்டும் லாகவத்தில்,