அவள், தன் எரிச்சலை அடக்குவது தெரியாமலே அடக்கினாள். அந்தக் குழந்தை அவளை, ஒரு சமயம் “அம்மா அம்மா...” என்று சொல்லி கன்னத்தைத் தொட்டது, அவள் இதயத்தைத் தொட்டது.
ஒரு சமயம், கணவனிடம் ஏதோ மனத்தகராறில் சாப்பாட்டுத் தட்டை முன்னால் வைத்துக் கொண்டே, சாப்பிடவும் முடியாமல், சாப்பிடாமல் இருக்கவும் முடியாமல், அவள் கோபத்தாலும், அந்தக் கோபத்தை மீறிய பசியாலும் சுவரில் தலையைத் தேய்த்துக் கொண்டே இருந்த போது, இந்தக் குழந்தை, தன் வெள்ளரிப் பிஞ்சு விரல்களால், சோற்றை எடுத்து, அவள் வாயில் ஊட்டிய போது, பார்வதியின் வயிறு நிறைந்ததோ இல்லியோ, இதயம் நிறைந்தது. அன்றில் இருந்து இன்றுவரை, குழந்தை எங்கிருந்து வந்ததோ, அங்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்ற ஆசைக்கு, நிராசை கொடுத்துவிட்டு, இயல்பான தாய்மையினால் உந்தப்பட்டு, மல்லிகாவை, அவள், தாய்க்குத் தாயாக வளர்த்து வருகிறாள்.
சகோதரர்களின் சகவாசத்தால், அவ்வப்போது அவளுக்கு “நான் அனாதையாயிடுவேனோ... மல்லிகா கை விட்டுடுவாளோ” என்கிற எண்ணமும், பீதியும் எட்டிப் பார்த்தனவே அன்றி, இதுவரை, அவை எகிறவில்லை.
அப்படியே, அண்ணன்மார்களின் உபதேசத்தால், மல்லிகா கல்யாணம் ஆனதும் மாறினாலும் மாறலாம் என்ற எண்ண உளைச்சலில், அவள் சிக்கித் தவித்து, ஓரளவு சினந்தவளாய் இருப்பதுண்டு.
கல்லூரிக்குப் போகும் மல்லிகா, எப்போதாவது “சும்மா இருங்கம்மா. உங்களுக்கு ஒண்ணுந் தெரியாது” என்று சொல்லுவாள். பார்வதி உடனே ஒன்றும் தெரியாது என்றும் ஒன்றும் தெரியாத தன்னை, மல்லிகா, சொந்த அப்பாவுடன் சேர்ந்து கொண்டு, ஏமாற்றப் போகிறாள் என்றும், இன்றைக்கே சொத்து பற்றி இரண்டில் ஒன்றைப் பார்த்துவிட வேண்டும் என்றும், நாள் முழுதும் துடிப்பாள். என்றாலும் கல்லூரியில் இருந்து, மல்லிகா திரும்பியதும், நினைத்ததை மறந்து, “பக்கடா போடட்டுமாம்மா... ஆரஞ்சு வேணுமா... ஆப்பிள் வேணுமா...” என்று கேட்பாள்.
வாசல் அருகே நின்ற ஆட்டோ ரிக்ஷாவின் டிரைவர் உள்ளே எட்டிப் பார்த்தார். மல்லிகா இன்னும் வராதது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையில், வாடகைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் ஆட்டோ அது. மல்லிகாவை கல்லூரியில் கொண்டு போய் விடவேண்டும். மாலையில் கூட்டிக் கொண்டு வர வேண்டும்.
குளியலறைப் பக்கமாய்ப் போன பார்வதி, ஆட்டோவைப் பார்த்ததும், மல்லிகாவின் அறைக்கு வந்தாள். மல்லிகா, எதுவுமே புரியாதவள் போல், மேஜையின் முன் கைகளை ஊன்றி, முகத்தை அவற்றில் வைத்து, நெற்றியை, கோடுகள் விழும் வண்ணம் சுழித்தாள், எங்கேயும்