ஜாக்கிரதையா போயிட்டு வா” என்று மல்லிகாவுக்கு மட்டும் கேட்கும்படியாக முனங்கிக் கொண்டே மச்சான்காரரைத் திரும்பிப் பாராமல் நடந்து, அரவை மில்லை நோக்கிப் போனார். ‘காலாங் காத்தால என்னடா சாமி இது... யாரை வேணுமுன்னாலும் அனுப்பு... ஆனால் இவரை மட்டும் அனுப்பாத...’
சொக்கலிங்கம் வெளியே போனபோது, பார்வதியும் அவள் அண்ணனும் வீட்டுக்குள் வந்தார்கள். ராமசாமி பெருமூச்சு விட்டுக் கொண்டே பேச்சைத் துவங்கினார்.
“உன்னை அடிக்கடி வந்து பார்க்கணும் போலத் தோணுது. அதே சமயம் மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டான்னு சொன்ன பழமொழியையும் நினைத்துப் பார்க்க வேண்டியதிருக்கு.”
“என்னாண்ணா... புது மொழியாய் பேசுறீங்க...”
“பின்ன என்னம்மா... மச்சான் என்னை நாயை பேசுனது மாதிரி பேசுறாரு. எத்தனை நாளைக்குத்தான் வாலைச் சுருட்டிக்கிட்டு வாரது?”
“அவரைப் பற்றிதான் உங்களுக்குத் தெரியுமே. மனசில ஒண்ணுங் கிடையாது.”
“மனசில ஒண்ணுமில்லாம இருக்கவங்களுக்கு தலையில் ஏதாவது இருக்கும். உன் வீட்டுக்காரருக்கு அங்கேயும் ஒண்ணுங் கிடையாது. இல்லன்னால், நோட்டிஸ்ல வெறும் பெயரைக் கூடப் போடாத வீட்ல போய், ஒரு பவுன் மோதிரமும், நூறு ரூபாயும் கொடுப்பாரா... என் வீட்ல ஒரு கல்யாணம் காட்சி நடந்து, நான் அவரு பெயரை போடலன்னு வச்சுக்கோ... மனுசன் சும்மா இருப்பாரா... நீதான் சும்மா இருப்பியா?”
“எப்படியோ நடந்தது நடந்து போச்சு... இனிமேல் அவங்க படிவாசல் கூட மிதிக்கப் போறதுல்ல...”
“அங்க தான் நீ தப்புப் பண்ற.”
“எங்க?”
“சின்னப் பிள்ளையில எப்படி இருந்தியோ... அப்படியே தான் இருக்கம்மா. பெருமாள் மல்லிகாவை திட்டி அனுப்புன பிறகு, அப்புறம் என்ன பேசுனான்னு தெரிந்தா, இப்படிப் பேசுவியா?”
“என்ன பேசுனாராம்?”
“நீ மல்லிகாவை மிரட்டி, அவங்க கூட பேசக்கூடாதுன்னு வைத்திருக்கியாம்... எல்லாம் சொக்கலிங்கம் மச்சானோட முகத்துக்காகப் பார்க்கானாம். அவரு மண்டையைப் போட்டதும், மல்லிகா மூலம் உன் கண்ணுல விரல் விட்டு ஆட்டுவானாம்.”
“குடிகாரன்... அப்படித்தான் பேசுவான்... விட்டுத் தள்ளுங்க...”
“விட்டுத் தள்ளக் கூடிய சமாச்சாரமில்லம்மா... நாளைக்கு மச்சானுக்கு ஏதோ ஒண்ணு