(Reading time: 20 - 40 minutes)
Irulum oliyum
Irulum oliyum

இரண்டாவது மகள் நளினியை கொடுக்கப் போறேன். அப்புறம் என் மேல வருத்தப்படப்படாது. நான் வரட்டுமா?”

பார்வதி, அண்ணனைப் ‘போய் வாருங்கள்’ என்று சொல்ல முடியாத அளவுக்கு, பித்துப்பிடித்தவளாய் இருந்தாள்.

ராமசாமி போய்விட்டார். ஆனால், அவர் சொன்ன வார்த்தைகள் போகவில்லை. அவள், தன் உள்ளத்தையே போர்க்களமாக்கி விட்டாள்.

‘மல்லி ஒருவேளை... அவருக்குப் பிறகு, அப்பா கூட சேர்ந்திடுவாளா... அந்த குடிகாரன் சொன்னபடி எல்லாம் ஆடுவாளோ? அப்படியானால் என் கதி, என் கதி? அனாதையாக ஆயிடுவேனோ? சொத்தெல்லாம் போயிடுமோ? மல்லி நல்லவளாய் இருந்து, அவள் புருஷன் மோசமாய் இருந்தால் என் கதி என்னாகிறது? என்கிட்ட சூதாய் பேசமாட்டாரு... என் நன்மைக்காகத்தான் பேசுவாரு... அதோட இந்த ராமன், என்னோட சொந்த அக்காள் மகன். ஊரில் ரவுடித்தனம் செய்தாலும், என்னை ‘சித்தி’ன்னு வாய் நிறையக் கூப்புடுற பிள்ளை. அவனும் நல்லா இருக்கணும், மல்லிகாவும் நல்லா இருக்கணும். குடிகாரன் பெருமாள் கிட்டே வரப்படாது. அதுக்காக, பொருத்தம் இல்லாத கல்யாணத்தைப் பண்ண முடியுமா? முடியணும். எப்படியோ முடியணும். இந்த மல்லிகா பெருமாள் பெண் தானே... அப்பன் புத்தியில் கால்வாசியாவது இருக்காதா?’

ராமசாமி போனதில் இருந்து மல்லிகா கல்லூரியில் இருந்து திரும்புவது வரைக்கும் பார்வதிக்கு ஒன்றும் ஓடவில்லை. வயிற்றுக்கு எப்போதும் வஞ்சகம் செய்யாத அவள், அன்று சரியாகச் சாப்பிடக் கூட இல்லை.

துள்ளிக் குதித்துக் கொண்டு உள்ளே வந்த மல்லிகா, “அம்மா, நான் கட்டுரைப் போட்டியில் இரண்டாவதாக வந்திருக்கேன் அம்மா” என்றாள்.

பார்வதி அப்போதைக்கு, அண்ணனையும், அவர் சொன்னதையும் மறந்து விட்டாள். “என்ன போட்டிம்மா...?”

“கட்டுரைப் போட்டி...”

“அப்படின்னா?”

“சும்மா கிடங்கம்மா... உங்களுக்கு ஒண்ணுந் தெரியாது. உங்ககிட்ட சொன்னதே தப்பு. துளைத்து எடுத்துடுவீங்க. கட்டுரை என்றாலே என்னன்னு தெரியாது. அதை விளக்கிட்டு, அப்புறம் போட்டியைப் பற்றி விளக்க இரவு மணி பன்னிரண்டாயிடும். பசிக்குதம்மா. அப்பா வரும் போது விவரமாய் சொல்றேன். நீங்கள் அப்போ கேளுங்க. இப்போ பசிக்குது.”

பார்வதிக்கும், இப்போது மனதுக்குள் பசியெடுத்தது. அண்ணன் சொன்னது சரிதான். நான் தான் ஒண்ணும் தெரியாதவளாய் வெளுத்ததை எல்லாம் பாலுன்னு நினைக்கிறேன்.

One comment

  • facepalm nalla manathullavargale aduthavar pechai kettu thadam maari pogiraargal.paarvathi maruvatharkku ketkka venduma.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.