Flexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 06 - சு. சமுத்திரம்
நாலு மாதம் கடந்தது.
பார்வதி பழைய பார்வதியாக இல்லாதது மல்லிகாவிற்கு தெளிவாகத் தெரிந்துவிட்டது. அடிக்கடி அரவை மில்லில் வேலை பார்க்கும் பையன்களைத் திட்டும் சாக்கில் “ஊர்ப்பயல் பிள்ளைகள் ஊர்ப்பயல் பிள்ளைகள்தான்” என்று ஜாடைமாடையாகத் திட்டத் துவங்கினாள்.
இப்போது மல்லிகாவிற்கு தலைவாரி விடுவதில்லை. கண்ணுக்கு மை போடுவதில்லை. அதே சமயம் எதுவுமே நடவாதது மாதிரியும் பல சமயங்களில் மல்லிகாவிடம் நடந்து கொள்கிறாள். ஒரு தடவை ஆட்டோ ரிக்ஷாவில் ஏறும் போது மல்லிகா கால் தவறி கீழே விழப்போன போது பார்வதி பதறிப்போய் “பார்த்துப் போம்மா. நீ வர்றது வரைக்கும் உயிரைக் கையில் பிடித்துக்கிட்டு இருக்க வேண்டியதிருக்கு” என்று சொல்லியிருக்கிறாள். அதனால் அம்மா, பழைய அம்மாவாக மாறிவிட்டாள் என்று மகிழ்ந்து போன மல்லிகா, மாலையில் துள்ளிக் குதித்து ஓடி வந்து ‘அம்மா’ என்ற போது, அண்ணனுடன் சீரியஸாகப் பேசிக் கொண்டிருந்த அந்த அம்மாக்காரி “அம்மா இன்னும் சாவாமல் தான் இருக்கேன்” என்று சொன்னாள்.
உடனே மல்லிகா, ‘நாம சாவாமல் இருக்கோமோ’ என்று மனதுக்குள்ளே புலம்பிக் கொண்டாள். அண்ணன் ராமசாமியின் வருகை அதிகரிக்க அதிகரிக்க, அம்மாக்காரியின் வெறுப்பின் வேகம் ஏறிக் கொண்டிருப்பது கல்லூரிக்காரிக்குத் தெரியாது.
ராமனும் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தான்.
“உன் சித்திக்காரியை கெட்டியாய் பிடித்துக்கடா... அவ்வளவுதான் நான் இப்போ சொல்ல முடியும்” என்று பெரிய மாமா ராமசாமி சொன்னதன் உள்ளர்த்தம் புரியாவிட்டாலும், வெளியர்த்தம் புரிந்தவன் போல், சித்தி வீட்டுக்கு வரத் துவங்கினான்.
“இங்கே எதுக்குடா வந்தே” என்று கேட்கிற சித்தி, “ஏண்டா, அடிக்கடி வரமாட்டேங்கிற” என்று சொன்னதில் அவனுக்கு பட்டைச் சாராயத்தைக் குடிக்கும் போது ஏற்பட்ட ‘கிக்’கை விட அதிகமான ‘கிக்’ கிடைத்தது. சொக்கலிங்கம் தான் அவன் வருகையை அறவே அங்கீகரிக்கவில்லை. ஆனால், அவன் “சித்தப்பா, சித்தப்பா” என்று செல்லமாகச் சொல்லிக் கொண்டே, அவர் கொண்டு வரும் டிரம்களையும், தகர டப்பாக்களையும் எடுத்து வீட்டுக்குள் வைத்த போது, சொக்கலிங்கம் அவனை விரும்பவில்லையானாலும், வெறுக்காமல் இருந்தார்.
ஒரு சமயம் அவர் அரவை மில்லில் ஏதோ கலாட்டா. மிளகாயை சரியாக அரைக்கவில்லை என்று ஒரு பட்டாக் கத்தி மைனர் சொக்கலிங்கத்தை மிரட்டினான். பயந்து போன சொக்கலிங்கம், அவனிடம் வாங்கிய காசைத் திருப்பிக் கொடுத்தார்.
பட்டாக்கத்திக்கு மேலும் காசு கிடைக்கும் என்று நம்பிக்கை ஏற்பட்டது. “என்னோட மிளகாயை