“அது எப்படியண்ணா...”
“சில சமயம்... ஆபரேஷன் செய்யணுமுன்னா செய்துதான் ஆகணும். ராமனைக் கட்டிக்க சம்மதிக்கலன்னா, அவள் இங்க இருக்கிறதுல அர்த்தமில்லை... இது உன்னோட சொந்த விஷயம். கேட்டாக் கேளு... விட்டால் விடு. ஆனால் ஒண்ணு அப்புறமாய், பெருமாள் திட்டுறான்... மல்லிகா புருஷன் அடிக்கடி வாரான்னு எங்கிட்ட வரப்படாது சொல்லிட்டேன். இன்னும் ஒரு வாரத்தில் முடிவு தெரியணும். இல்லை என்றால், என் ரெண்டாவது மகள் இருக்கவே இருக்காள்...”
“ஏண்ணா கோபப்படுறீங்க... நான் பெண். எனக்கு என்ன தெரியும்? உங்ககிட்ட யோசனைதானே கேட்டேன்.”
“அதைத்தான் சொல்றேன். மல்லிகா, இந்த வீட்ல இருக்கிறதாய் இருந்தால், நம் ராமன் பயலோட இருக்கணும். இல்லை என்றால், எங்கேயும் போகட்டும். நீ, ராமனையே சுவீகாரமாய் எடுத்துக்கலாம். என் ரெண்டாவது பொண்ணு, உனக்கே மருமகளாய் வந்துடலாம். நீ கண் மூடுறது வரைக்கும், கண் கலங்காமல் பார்த்துக்குவாங்க...”
சிறிது திடுக்கிட்ட பார்வதிக்கு, மல்லிகாவை என்ன தான் வெறுத்தாலும் அவளை வீட்டை விட்டு வெளியேற்றுவது என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அதே சமயம், அண்ணன் சொன்னதுக்கு மறுமொழி கூறத் தெரியாமல், லேசாகச் சிரித்துக் கொண்டாள். சோகச் சிரிப்பு.
பார்வதி அண்ணன் போய்விட்டார் என்பதை, அரவை மில் பையன் ஒருவனை அனுப்பி நிச்சயப்படுத்திக் கொண்ட சொக்கலிங்கம் உள்ளே வந்தார்.
அந்தச் சமயத்தில், மல்லிகாவும், கல்லூரியில் இருந்து வந்தாள். வந்தவுடனேயே அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டே, “அப்பா... சபையர் தியேட்டரில் ஒரு நல்ல ஆங்கிலப் படம் வந்திருக்கு... என்னை கூட்டிக் கொண்டு காட்டுங்களேன்” என்று செல்லமாகச் சிணுங்கினாள்.
“நாளைக்குப் போகலாண்டா” என்று தனக்கு அவள் ஆண்பிள்ளை என்பதுபோல் சொக்கலிங்கம் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
பார்வதிக்குப் பற்றி எரிந்தது. காக்கா பிடிக்கிறாளோ... அப்பாவைக் கைக்குள் போட்டுக்கிட்டு, ராமனை காட்டமாட்டேன்னு சொல்லிவிடுவாளோ... கடைசியில், அந்த குடிகாரன் பெருமாள்கிட்ட அவஸ்தைப் பட வேண்டியதிருக்குமோ... இதுக்கெல்லாம் யார் காரணம்... இவள் தான்... இவளே தான்...
கணவன், காது கேட்காத தூரத்திற்குப் போய்விட்டார் என்பதை, வாசலுக்குப் போய் எட்டிப் பார்த்து உறுதி செய்து கொண்ட பார்வதி, அங்கிருந்தபடியே, “பொம்புளன்னா... ஒரு அடக்கம்