Flexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 07 - சு. சமுத்திரம்
இந்த நேரத்தில் ஒரு நாள் சொக்கலிங்கத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது.
டாக்டர், உடனே வந்துவிட்டதால், ஈமப்பத்திரிகைக்கு அவசியமில்லாமல் போய்விட்டது. என்றாலும் மனிதர் ஆடிப் போய் விட்டார். இது, இரண்டாவது முறை. மூன்றாவது எப்படி இருக்குமோ...
பார்வதியும், மல்லிகாவும், அவரை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டார்கள். உறவினர்கள் வந்த வண்ணமாக இருந்தார்கள். செல்லம்மாவும் வந்து பார்த்தாள். கல்யாணமாகி கர்ப்பம் தரித்திருக்கும் சந்திராவும், அவள் புருஷனும் வந்தார்கள். எல்லோரும் வந்தார்கள். ஆனால் பெருமாள் மட்டும் எட்டிப் பார்க்கவில்லை.
எப்படியோ, சொக்கலிங்கம் தேறி வந்து கொண்டிருந்த போது, ஒரு நாள் பார்வதி, தேம்பி அழுது கொண்டிருந்தாள். கணவர் பதறிப் போனார்.
“ஏம்மா அழுவுறே... எனக்குத்தான் சுகமாயிக்கிட்டே வருதே!”
“ஏதோ ஆண்டவன் புண்ணியத்தால, இந்தத் தடவை என் தாலி கெட்டியாய் இருக்கு... இன்னொரு தடவை இப்படி வந்து, நடக்கக் கூடாதது நடந்துவிட்டால், என் கதியை நினைத்துப் பார்த்தேன். நாய் கூட திரும்பிப் பாராது.”
“பைத்தியம்... அப்படியெல்லாம் பேசப்படாது. உனக்கு ஒரு குறையும் வராது. மல்லிகா நல்ல பொண்ணு.”
“மல்லி நல்லவள் தான்... அவளுக்கு வாய்க்கிறவன் நல்லவனாய் இருக்கணுங்கறது என்ன கட்டாயம்? அவள் அப்பன்... என்னை மிரட்ட மாட்டான் என்கிறது என்ன நிச்சயம்?”
“சரி, கவலைப்படாதே... உடம்பு சுகமானதும், அவளுக்கு நல்ல பையனாய் பார்க்கிறேன்!”
“கையில வெண்ணெயை வைத்துக்கிட்டு எதுக்காக நெய்க்கு அலையணும்?”
“என்ன சொல்றே?”
“நம்ம ராமன்...”
“நெஞ்சு லேசா வலிக்குது... மருந்தை எடு.”
“என்னை குழந்தை மாதிரி வச்சிருக்கிங்க... இனிமேல் வேலைக்காரியாய் ஆகப் போறேன்.”
சொக்கலிங்கம், நான்கைந்து நாட்களாக தலையை உருட்டிக் கொண்டு யோசித்தார். மனைவி சொல்வதில் ஓரளவு நியாயம் இருப்பது போல் அவருக்குத் தோன்றியது. அவர் காலத்திற்குப் பிறகு, அவள் காலம் எப்படி ஆகுமோ... அவள் சொல்வது மாதிரி... பெருமாள் ஏடா கோடம் செய்தால்...? போன உயிரை டாக்டர் மீட்டுயிருக்காரு... ஆனால் இந்த பெருமாள் ‘இருக்கியா செத்தியான்னு’ கூட கேட்கல... போதாக்குறைக்கு, “உன் மச்சான் மண்டையை போடட்டும். அப்புறந்தான் விவகாரமே இருக்கு” என்று இரண்டாவது மைத்துனன் கிட்ட சொல்றானாம்.