சொன்னபடி செய்றவனாச்சே... பார்வதிக்கு பாதுகாப்பு இல்லாமல் போயிடக் கூடாதே... நமக்கோ இந்த மாரடைப்பு எப்போ வேணுமுன்னாலும் வரலாம்... நீரிழிவு... இரத்த அழுத்த நோய்... இதுல ஒவ்வொண்ணும் முறை வைத்தது மாதிரி, நெஞ்சை அடைக்குது... திடீர்னு செத்து... விவகாரம் தீராமல் போனால், எல்லோருக்குமே தொல்லை... இந்த மல்லிகா வேறு... வர வர ஒதுங்கி ஒதுங்கிப் போறாள். இவளையும் நம்ப முடியாது போலிருக்கு... எப்படியாவது பார்வதிக்கும் பாதுகாப்பு வேணும்... மல்லிகாவுக்கும் பாதுகாப்பு வேணும். ராமனை மாதிரி ரவுடியாலதான் சொத்துக்களைக் காப்பாற்ற முடியும்... அதுக்காக மல்லிகாவை... அவனுக்கு...
ஒருநாள் பார்வதி அவருக்கு ஆப்பிள் ஜூஸ் கொண்டு வந்த போது, அவர் சில சந்தேகங்களைக் கேட்க, பார்வதி அவற்றைத் தீர்த்து வைத்தாள்.
“ராமன் படிக்காதவனாச்சே...”
“படித்தவங்க மட்டும் என்னத்த கிழிச்சிட்டாங்க... நம்ம எதிர்வீட்டு கமலா டாக்டருக்குப் படித்தவள். புருஷன் எஸ்.எஸ்.எல்.சி. பெயில். அவங்க குடும்ப உறவு எப்போதாவது பெயிலாகி இருக்கா? மூணாவது தெருவுல இருக்காளே... முனுசாமி மகள் சரோஜா... பி.ஏ. படித்துவிட்டு ஆபீசரா வேலை பார்க்கிறாள். ஒரு பஸ் கண்டக்டரை கல்யாணம் செய்துக்கிட்டு சந்தோஷமாத்தானே இருக்கிறாள். எப்பவாவது அந்த கண்டக்டர், பஸ்ல முறைக்கது மாதிரி அவளை முறைக்கிறானா... படிப்பு... இந்தக் காலத்தில் தண்ணி பட்டபாடு. மரியாதை கிடையாது.”
“அதிகமாய் குடிக்கானடி...”
“இப்போ நாட்டுல எவன் குடிக்கல? குடிக்கிறது பெரிய பாவமா? நான் கூட ஜுரத்துல துடிக்கையில்... எங்க டாக்டர் சொன்னார்னு, இரண்டு ஸ்பூன் விஸ்கியையோ கிஸ்கியையோ கொடுக்கலியா... அதோட இப்போ ராமன் கொஞ்சம் கொஞ்சமாய் குடிக்கிறதை விட்டுக்கிட்டு வாரான். கொஞ்சம் நஞ்சம் இருக்கிற பழக்கத்தையும், மல்லிகாவைக் கட்டுனதும் மறந்துடுவான். அவளும் அவனைத் திருத்திடுவாள்.”
“அவள் கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்கிறேன்.”
“நாம வளர்த்த பொண்ணு நம்மை மீறிப் போவாளா... ஒரு தடவை, ஒரு கிழவர் ‘யாரையாவது காதலிக்கியாமா’ என்று கேலியாகக் கேட்டதுக்கு ‘காதலாவது... கீதலாவது... அப்பா எவனையாவது காட்டி கட்டுன்னால் கட்டுவேன். வெட்டுன்னால் வெட்டுவேன்னு’ அவள் சொன்னது ஞாபகம் இருக்கா?”
“எதுக்கும் நானே ஒரு வார்த்தை...”
“நீங்க கேட்க வேண்டாம். வெட்கப்படுவாள். நானே கேக்கிறேன். அப்புறம் அவள் இஷ்டம்.”