குனிந்தாள்.
செல்லம்மாளுக்குப் பற்றி எரிந்தது. ஒட்டிப்போன வயிற்றின் ஓரமாகக் கிடந்த ‘அச்சடி’ புடவையை இழுத்து வயிற்றை மூடிக் கொண்டாள். வயிறாரப் பெற்ற மகள், மூணாவது மனுஷியைச் சொல்வது போல், ‘உன் நாத்தனார்’ என்றதுமே, அவள் ஒரு கணம் செத்துப் போனாள். மறுகணம் “ஆமாண்டி... நான் நாத்தனார் தான். பெத்த தாயையே நாத்தனாரா ஆக்கின உனக்கு ஒரு பிள்ளை பிறந்தால் தான், உனக்கு என் நிலைமை புரியுண்டி” என்று சொல்லப் போனாள். பிறகு, தான் பெற்ற பிள்ளைக்கு, தன்னைப் போன்ற நிலைமை வரக்கூடாது என்று நினைத்தவள் போலவும், மகளைத் திட்ட நினைத்ததர்கு அபராதம் செலுத்துபவள் போலவும், “மல்லிகா, உங்க அப்பாவை... எங்கம்மா?” என்று கேட்டாள்.
மல்லிகா, அவளை நிமிர்ந்து பார்த்தாள். அந்த நடுத்தர வயதுக்காரியின் உதட்டுத் துடிப்பும், உட்குழி கண்ணும், அவளை என்னவோ செய்தது. ஊஞ்சல் பலகையில் இருந்து இறங்கி, “உள்ளே வாங்க” என்று சொல்லிக் கொண்டே, அவள் மீது கண்களை கருணையாய் பாய்த்துவிட்டு உள்ளே போய் விட்டாள்.
‘நீ உள்ளே வாங்கன்னு சொல்லாமல், வெளியே போங்கம்மான்னு ஒரு தடவையாவது சொன்னாலும் நான் சந்தோசப் பட்டிருப்பேனடி’ என்று தனக்குள்ளேயே பேசிக் கொண்டு செல்லம்மாள் உள்ளே வந்தாள். பார்வதி செல்லம்மாளை வழக்கம் போல் எதிர்கொண்டு அழைக்கவில்லை.
செல்லம்மா சமையலறைக்குள் போய் கொதித்துக் கொண்டிருந்த பாலை இறக்கப் போன பார்வதியிடம், “நான் இறக்குறேம்மா” என்று சொல்லிவிட்டு மட்டும் நிற்காமல் பாத்திரத்தையும் இறக்கி வைத்தாள். பின்னர், நாத்தனாரிடம் செயலில் பேச நினைத்தவள் போல், பக்கத்தில் கிடந்த துடைப்பத்தை எடுத்து சமையலறையைப் பெருக்கினாள். எச்சிக் காபி தம்ளர்களை துப்புறப்படுத்தி குலுக்கி அவற்றைக் கழுவி வைத்தாள். ஜொலித்துக் கொண்டிருந்த எவர்சில்வர் தம்ளர்களை, தன் புடவையை வைத்துத் துடைக்கப் போனாள். அந்த அழுக்குப் புடவையால் எவர்சில்வர் அழுக்காகும் என்று நினைத்தோ அல்லது எவர்சில்வர் அதில் ஒட்டிக் கொண்டு எடை குறையும் என்று எண்ணியோ, “தம்ளருங்க நல்லாத்தானே இருக்கு” என்று பார்வதி முகத்தை அந்தப் பெயருக்குரிய லட்சணம் இல்லாமல் சுருக்கிக் கொண்டே கேட்டாள்.
பெருமாள் பேசிய பேச்சு, அவளுக்கு அப்போது முழுதாகக் கேட்டது.
சிறிது நேரம் மௌனம்.
செல்லம்மா திக்கித் திணறிப் பேச்சைத் துவக்கினாள்.
“பார்வதி... நான் கேள்விப்பட்டது நிசந்தானா...?”