பார்வதிக்கு, எரிச்சலுக்கு மேல் எரிச்சல் தமாஷாசுப் பேசுவது போல், திமிராகச் சொன்னாள்...
“நீங்க எதைக் கேள்விப்பட்டீங்கண்ணு, நான் என்ன கனவா கண்டேன்...?”
“இல்ல... நம்ம மல்லிகாவிற்கு... மாப்பிள்ளை...”
“ஆமாம், பார்த்துகிட்டு இருக்கோம்...”
“முடிச்சுட்டதா கேள்விப்பட்டேன்...”
“முடிஞ்சது மாதிரிதான்...”
“நம்ம ராமன் தான் மாப்பிள்ளையாமே...”
“ராமனே தான்...”
செல்லம்மா லேசாகக் கூனிக் குறுகினாள். மேற்கொண்டு பேசினால் அவள் பத்ரகாளியாவாள் என்று தெரியும். அவள் தன் உணர்வுகளை ‘பத்திரமாக’ வைக்க நினைத்தாள். இருந்தாலும் பெற்ற பாசம் கேட்கவில்லை.
“நான் சொல்றேன்னு தப்பா நினைக்கப்படாது...”
“நீங்க முதல்ல விஷயத்தை சொல்லுங்க... தப்பா நினைக்கக் கூடிய விஷயமா என்கிறதை சொன்ன பிறகு... சொல்றேன்...”
“உனக்கு இல்லாத உரிமை இல்ல... நான் பெத்துத்தான் போட்டேன். அப்புறம் வளர்த்ததெல்லாம் நீதான். இருந்தாலும்... எனக்குக் காபி வேண்டாம்மா... வர வர... காபி குடிச்சால் வாந்தி வந்துடுது... இருந்தாலும்... ராமனுக்குக் கொடுக்கிறதுன்னா...”
“ஏன் ‘இன்னா’ போடுகிறீங்க. அவனுக்கு என்ன குறைச்சல்?”
“உனக்கே தெரியும். இவள் படித்தவள். அவன் படிக்கல. படிக்காட்டியும் பரவாயில்ல. குடிக்கறான்... குடித்தாலும் பரவாயில்ல... பட்டச் சாராயமா குடிக்கறான்...”
“உங்க புருஷன் குடிக்காததையா இவன் குடிக்கறான்?”
“என் நிலைமை... என் பொண்ணுக்கும் வரக்கூடாதுன்னுதான் உன்கிட்ட பிச்சை கேட்க வந்தேன். என் வீட்டுக்காரர் குடிச்சதும் அப்படியே படுத்துக்கிறார். ஆனால், உன் ராமன், குடிச்சிட்டு சோடா பாட்டில் எடுக்கறான். இதுக்குள்ள மூணு தடவை... ஜெயிலுக்கு வேற...”
பார்வதியால் மேற்கொண்டு கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை. கழுத்தில் கிடந்த நெக்லசை, நைலக்ஸ் புடவையின் முனையால் துடைத்துக் கொண்டு, உள்ளத்து உணர்வுகளையும் துடைப்பவள் போல், வார்த்தைகளைப் பெருக்கிக் கொண்டே போனாள்.
“நீங்க காலங்காத்தால... வந்ததை பார்த்தவுடனே நினைச்சேன். இந்தக் கல்யாணத்துல தலையிட உங்களுக்கு உரிமை கிடையாது. பிறந்ததுல இருந்து, வளர்த்தது வரைக்கும் கவனிக்கிறவள் நான். பெத்துடுறது பெரிசல்ல. பெத்ததை வளர்க்கிறதுதான் பெரிசு. நாங்க