யாருக்குக் கொடுத்தால் உங்களுக்கென்ன?”
“நான்... எதுக்கு சொல்றேன்னா...?”
“நீங்க... எதுக்கும் சொல்ல வேண்டாம். அவள் என் வீட்ல இருக்கிற வரைக்கும் என் பொறுப்பு. மல்லிகா உங்க பொண்ணு இல்லன்னு நான் சொல்லல்ல. மகராசியா, உங்க மகளை வேணுமுன்னா உங்க வீட்டுக்கே கூட்டிக்கிட்டுப் போய், எந்த அர்ச்சுன ராசதுரைக்கு வேணுமுன்னாலும் கொடுங்க. ஆனால் ஆத்துல ஒரு காலு சேத்துல ஒரு காலு கதை வேண்டாம். இப்பவே வேணுமுன்னாலும் கூட்டிக்கிட்டுப் போங்க. இவள் பண்ற கூத்துக்கு நான் ஒருத்திதான் சரிக்கட்டிக்கிட்டுப் போக முடியும்...”
செல்லம்மா, அண்ணன் இல்லாத சமயத்தில், அவன் மனைவியிடம் மாட்டிக் கொண்டதற்காக வருந்தினாள். மீள வேண்டும் என்று நினைத்தவள் போல், அண்ணன் வருகிறாரா என்று வெளியே பார்த்தாள். போகலாமா என்று அடியெடுக்கப் போனாள். ஆனால் பாழும் கால்கள் நகர மறுத்தன. பெற்ற மனம் பெயர மறுத்தது. ‘அந்த நல்ல ராமனைக் கட்டியே சீதை படாத பாடுபட்டாள். இந்த ராமனை என் மவள் கட்டினால்? அட பகவானே... இதுக்கா அவளைப் பெத்தேன். இதுக்கா என் கிளியை, இவள் கிட்ட விட்டேன். இதுக்கா என் மாலையை... இவள் கையில் கொடுத்தேன்... அட கடவுளே...’
செல்லம்மாவால் பேச முடியவில்லை. தொண்டை கட்டியது. கண்களும் கொட்டியது. விம்மல் சத்தம், வெடிச்சத்தம் போல் கேட்டதால், பார்வதியே சிறிது நேரம் திகைத்துப் போனாள். பிறகு சமாளித்துக் கொண்டாள்.
“இந்தா பாருங்க... இந்த நீலி மாதிரி... அழுகுற வேலை வேண்டாம். நான் தான் சொல்லிவிட்டேனே... மல்லி என் வீட்ல இருக்கிற வரைக்கும்... என் அக்கா மகன் தான் மாப்பிள்ளை. உங்களுக்கு கஷ்டமா இருந்தால் இப்பவே, இந்த கணமே அவளை பெட்டி படுக்கையோடு கூட்டிக் கிட்டு போகலாம். ஏய் மல்லி... ஏய்...”
செல்லம்மாள் நாத்தனாரின் வாயைப் பொத்தினாள். ஏற்கெனவே ஏழு பிள்ளைகளோடு அவதிப்படுகிறவள். ஒருத்தி கரையேறி விட்டாள். இன்னொருத்தி கரையேற வேண்டும். பையன்களில் கடைசிப் பையன் படிக்கிறான். ஒருவன் மாமாவுடைய மளிகைக்கடையில் வேலை பார்க்கிறான். இன்னொருவன் வெட்டி. கடைசியாக உள்ள பத்து வயது மகளும் ஏழு வயது மகளும் வீட்டில். இருபது குடித்தனங்கள் உள்ள காம்பவுண்டு வீட்டுக்குள், பத்தடி ஐந்தடி பரப்பிற்குள் கக்கூஸ் பக்கம் உள்ள முதல் அறையில் குடியிருக்கும் அவளால் மல்லிகாவை அங்கே கொண்டு போக முடியாது. இரவில், அறைக்குள் படுத்தால் மூட்டைப் பூச்சியோடு, புழுக்கம். வெளியே படுத்தால் கொதிக்கும் தரை. ஒன்று மாற்றி ஒன்றாக அழும் குழந்தைகள். குடித்துவிட்டு மனைவிகளை அடிக்கும் கணவன்மார்கள். குடிக்காமலே அந்த