போதையைவிட அதிக போதையில் ஆம்படையான்களை திட்டும் சம்சாரங்கள். இந்த சகாரா சாகரத்துக்குள் அவளால் இருக்க முடியாது. இருக்கவும் மாட்டாள். நாற்காலியில் உட்கார்ந்தவளால் கழிநீர் ‘கால்வாய்’ திட்டில் உட்கார முடியாது. மெத்தையில் படுப்பவளால், மேடை போல் இருக்கும் அடுப்புத் திட்டில் படுக்க முடியாது. மின் விசிறிக்குள் அமர்ந்து, தலைமுடி ஒயிலாக ஆடி அசைய, ஒய்யாரமாக இருக்கும் அவளால், ஒண்டிக் குடித்தனத்தில் கை விசிறி கூட இல்லாத புழுக்க லோகத்தில் புக முடியாது. இவள் இங்கேயே இருக்கட்டும். இங்கேயே இருக்க வேண்டியவள். வேண்டியவளோ இல்லியோ இருக்க வேண்டும். அட... மாரியாத்தா... ஏழையின் பிள்ளை பணக்காரப் பிள்ளையாய் வாழ்ந்தாலும் அது ஏழை தானோ? ஏழையின் பிள்ளை ஏழையாக இருந்தால் தான் நல்லதோ?
செல்லம்மா நாத்தனாரிடம் மீண்டும் மன்றாடிப் பார்க்கலாமா என்று யோசித்தாள். அது வீண் என்பது போல் பார்வதி, “தராதரம் தெரியாத பய பிள்ளைகளை வீட்டுக்குள்ள சேர்க்கிறதே தப்பு... ஊர்ல சோறு தண்ணிகிடைக்காம... திரிஞ்ச... இந்த மாடசாமிப்பயல்... சாப்பிட்ட தட்டை கழுவாம போயிட்டான். வரட்டும். ஊருக்கே அவனை அடிச்சி விரட்டுனாத்தான் பன்னாட பயமவனுக்கு புத்திவரும். ஒவ்வொருத்தரையும் வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும்னு சொல்றது சரிதான்...” என்று தன்பாட்டுக்குப் புலம்பினான்.
அவளின் பரிபாஷை செல்லம்மாவுக்குப் புரிந்து விட்டது. “கல்யாணத்துக்காவது என்னை கூப்பிடுவியாம்மா...” என்று சொல்லிக் கொண்டே அதற்குக் காரணமான பதில் வருமுன்னே, செல்லம்மா சமையலறையை விட்டு வெளியே வந்தாள். மல்லிகா, சமையலறைக்கு வெளியே அதிர்ச்சியோடு நின்று கொண்டிருந்தாள். கண்கள் மட்டுமில்லாமல், முகமே அழுது கொண்டிருப்பது போன்ற தோற்றம்.
அம்மா, மகளை ஏறிட்டுப் பார்த்தாள். செவ்வாழை நிறத்தில், சிவந்திப்பூ நயத்தில், அளவெடுத்து வார்த்தெடுத்த சிலைபோல் விளங்கிய மேனியையும், ஆடாத வண்டுபோல் இருந்த கண்களையும், அசைகின்ற சங்கு போன்ற கழுத்தையும், முன் நெற்றி சுருங்க, முழுமேனி சுவரில் சாய, நின்ற மகளை அழாமல் அழுது கொண்டே பருகினாள். அவளருகே, உடம்பெல்லாம் பச்சை குத்தி, உடலெல்லாம் பட்டை போல், படைபடையாய் அடுக்கடுக்கான தோலோடு அருவருப்பான உருவத்தோடு, ஆடி இளைத்த பருவத்தோடு, ஆட நினைக்கும் கர்வத்தோடு உள்ள ராமனைப் பக்கத்தில் நிறுத்திப் பார்த்தாள். செல்லம்மாவால் அங்கே நிற்க முடியவில்லை. அழ முடியாமல் அழுதாள். ஓட முடியாமல் ஓடினாள்.
மல்லிகா, இப்போது செல்லம்மாளை, போகிறாளே என்பது போல் பார்த்தாள். காய்ந்து, உலர்ந்து, தேய்ந்து போன சுரைக்காய் போல உள்ள அவள் மார்பில் தான், தான் பால் அருந்தியிருக்க வேண்டும்; இனிமேல் கிழிய முடியாது என்பது போல் கிழிந்து போன புடவை கொண்ட அவள்