மடியில் தான், தான் புரண்டிருக்க வேண்டும்; வயிறெரிந்து ஓடும் அவள் வயிற்றில் தான், தான் ஜனித்திருக்க வேண்டும் என்ற சாதாரண உண்மை, இப்போது பேருண்மையாக, முதல் தடவையாக “அம்மா... அம்மா...” என்று லேசாகக் கேட்குமளவிற்குப் பேசினாள்.
“ஏய் மல்லி” என்று ‘அம்மா’ கூப்பிட்ட போது அங்கே ஓடி வந்தவள், உள்ளே அடிபட்ட பேச்சு, தன்னை அடிக்கும் பேச்சு என்று தெரிந்ததும், அவள் இங்கே இந்த சுவரில் சாய்ந்தாள்.
மல்லிகா தலையைப் பிடித்துக் கொண்டாள்.
ராமனுக்கா அவள்? தெரு முழுதும் புரண்டு கொண்டு போவானே அவனுக்கா நான்? குடித்துக் கொண்டு புரள்வது மோசம் என்று நினைத்து புரண்டுகொண்டே குடிப்பானே, அந்த ராமனுக்கா நான்? கெட்டை வார்த்தை தவிர, எந்த வார்த்தையும் பேசாத அந்த கெட்டவனுக்கா நான்? முடியாது முடியவே முடியாது.
என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்று யோசித்தவாறு அவள், தலையை சுவரில் உருட்டிய போது பார்வதி வெளியே வந்து, “சுவர்ல தலைய வைக்கிறியே அறிவிருக்கா உனக்கு? இந்தா பாரு சுவருல்லாங்... எண்ணெய்க்கசடு... உன் அம்மா புத்திதானே உனக்கும் இருக்கும். வேணுமுன்னா அவள் கூட போயேண்டி ஏண்டி... அழுவுறாப்போல நிக்கறே?” என்று அதட்டினாள்.
ராமனை, அவள் கல்யாணம் செய்து கொள்ள மாட்டாள் என்ற உள்ளுணர்வு, அவளை, இதுவரை பேசாத வார்த்தைகளைப் பேச வைத்தன.
மல்லிகா திடுக்கிட்டாள். என்னதான் அம்மா என்றாலும், முகம் பார்த்துப் பேசியறியாத அந்த அன்னை வாழும் வீட்டுக்குள் அவளால் போக முடியாது. அவளால் எப்படிப் போக முடியும்? போனாலும், எப்படி இருக்க முடியும்? அந்த வீட்டை விட அந்த ஜனங்களை விட ராமன் தேவலையோ... ஒவ்வொருத்தர், அண்ணன் தங்கைன்னா உயிரை விடுறாங்க. சினிமாவுல கூட காட்டுறாங்க. நம்மால் அப்படி இருக்க முடியலியே... இந்த வீட்டையும் சில சமயம் சொந்த வீடாய் நினைக்க முடியலியே... ஏன்... ஒரு வேளை... நான் தனிப் பிறவியோ... இல்ல தனிப்படுத்தப்பட்ட பிறவியோ...
மல்லிகா தன் வசப்பட்டு நின்றபோது, பார்வதி உணர்ச்சிவசப்பட்டாள்.
“ஏண்டி... பித்துப் பிடித்து நிக்கறே? உன் அம்மா... மருந்து தடவிட்டுப் போயிட்டாளோ? வேணுமுன்னா போயேண்டி... நான் வேணுமுன்னா... கொண்டு விடட்டுமா?”
அந்த சின்னஞ்சிறிசுக்கு, சுய உணர்வு வந்தது. அந்த வீட்டுக்கு அனுப்பி விடுவாளோ? அந்த ‘ஆளிடம்’ பேச்சு வாங்க வேண்டியது வருமோ?
மல்லிகாவுக்கு என்ன செய்கிறோம் என்றே தெரியவில்லை.