Flexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 09 - சு. சமுத்திரம்
கல்லூரி மாணவ மாணவிகள் அந்த அறையில் கூடி விட்டார்கள்.
மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி அங்கே நடைபெறப் போகிறது.
சரவணன் பேச்சில் அப்படியொரு மயக்கம் ஏற்படும். அதில் சொல்லோசை இருக்காது. மொழியடுக்கு இருக்காது. ஏற்ற இறக்கம் இருக்காது. எதுவுமே இல்லாதது போலத் தோன்றும் எளிய சாதாரண வார்த்தைகள், இயல்பான குரல், கைகளை நீட்டி முழக்காத நளினம், யாரோ நெருங்கிய சிநேகிதர் ஒருவர் நம்மிடம் மனம் விட்டுப் பேசுவது போன்ற பாணி, இதயமே வாயாக வந்திருப்பது போன்ற நேர்த்தி, பரிசுக்காக பரபரப்படையாத இயற்கைத்தன்மை, இத்தனையும் நிறைந்த அவனுக்கு, முதற் பரிசு கிடைக்கும் என்பது முடிவான விஷயம். அவன் பேசுவதைக் கேட்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், சில ‘வண்ணப் பூச்சிகள்’ மேடையில் நாக்காடுவதைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவும், மாணவர்கள் பெருந்திரளாகக் குழுமினார்கள்.
கல்லூரிப் பேராசிரியர் ஒருவர், நடுவர்களை அறிமுகம் செய்துவிட்டு, ‘பெண்ணுரிமை’ என்ற தலைப்புதான் போட்டியின் தலைப்பு என்று சொன்ன பிறகும், அவர் மைக்கை விட மனமில்லாமல், பெண் என்றால் என்ன என்று விளக்கம் கொடுத்து விட்டு ‘உரிமைக்கு’ வந்த போது “உக்காருய்யா சுக்குத் தண்ணி” என்றது ஒரு குரல். ஆசிரியர் குரலடங்கி உட்கார்ந்தார்.
போட்டிக்கு முதலாவதாகப் பேச வந்த பையன் ஒருவன், “பெண்ணுக்கு விடுதலை இல்லையென்றால்” என்று பாரதியாரை மேற்கோள் காட்டியபோது, “ஆஹாஹா... ஆஹாஹா... அப்பனே பாரதி பேரா... அடச்சீ” என்றது இன்னொரு குரல். உடனே மாணவிகள் கூட்டத்தில் பலத்த சிரிப்பு. அந்த சிரிப்பு மேலும் பலக்க வேண்டும் என்பதற்காக பல தடவை “அடச்சீக்கள்”. ‘பட்டறிந்த’ பேச்சாளன் பட்ட மரமானான்.
மூன்றாவதாக வந்த மாணவி “பெண்கள் என்றால்...” என்று தொடங்கவும், “அது நீ இல்லே, நீ... இல்லே...” என்று அந்தப் பெண்ணை டபாய்த்தார்கள். அவளும் ஓய்ந்த பிறகு நடுவர் “மல்லிகா” என்றார்.
மல்லிகா எழுந்திருக்கவில்லை. கோர்ட்டில் அழைப்பது போல இரண்டாவது தடவையாக “மல்லிகா!” என்ற போது, கூட்டத்தின் கண்கள், அவளை மொய்த்தன.
மல்லிகா மரியாதையாக எழுந்து, “நான் பேசப் போவதில்லை” என்று சைகை செய்தாள். அவளைக் கோட்டா செய்யப் போன மாணவர்கள், அவள் முகத்தில் படர்ந்திருந்த துயரத்தையும், கலைந்திருந்த முடியையும், கவிழ்ந்திருந்த தலையையும் பார்த்து, பரிதாபப்பட்டது போல் சும்மா இருந்தார்கள். ஒரே ஒரு ஆகாதவன் மட்டும், “சரவணின் பியூட்டியே... அடிமே உன் லூட்டியை” என்று சொன்ன போது, “மக்குப் பையா... கொக்குத்