மல்லிகா, அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். பயந்து போய் சிறிது விலகிக் கொண்டாள். சரவணன் புரிந்து கொண்டான்.
“நான் நீங்க நினைக்கிற இனத்தைச் சேர்ந்தவன் இல்லை. வரதட்சணைக் கொடுமைன்னு அடிக்கிறாங்களே, அதைப் பேசலாமுன்னு எண்ணிக் கேட்டேன். உங்களிடம் தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு. நாளைக்கு கல்லூரிகளுக்கு இடையே நடக்கிற ஒரு பேச்சுப் போட்டிக்கு நீங்கள் பாயிண்ட்ஸ் கொடுத்தால், பரிசு வாங்கிடுவேன்.”
“இங்கேயே நின்று பேசலாமே?”
“வரதட்சணைக் கொடுமையால பல பெண்களுக்கு கல்யாணம் நடக்கலேன்னு மேடையில பேசறோம். இந்தப் பெண்கள், பெரிய பெரிய ஆபீசருக்கு மனைவியாய்ப் போகிற ஆசை நிறைவேறாமல் போவதைத் தான் வரதட்சணைக் கொடுமைன்னு சொல்றாங்க. இவங்க ஏன் ஒரு பியூனைக் கல்யாணம் பண்ணப்படாது? ஏன் ஒரு ரிக்ஷா தொழிலாளியைக் கல்யாணம் பண்ணப்படாது? நான் பண்ணணுமுன்னு சொல்லவில்லை... பண்ண முடியாதுன்னும் தெரியும்... ஏன் தெரியுமா?”
“சொல்லுங்க...”
“இந்த சமூக அமைப்பிலே... பியூனோட வாழ்க்கை முறை வேறே, ஆபீசரோட வாழ்க்கை முறை வேறே. ஏழையோட கலாச்சாரம் வேறே, பணக்காரன் கலாச்சாரம் வேறே. இவை போய்... கலாச்சார ஒருமையும் வாழ்க்கை முறையில் ஒருமையும் வந்தால்தான், தொழில் அந்தஸ்து, சமூக அந்தஸ்தோட இணைக்கப்படாத காலம் வந்தால் தான், வரதட்சணைப் பிரச்சினையும் தீரும். இல்லை என்றால், அது அன்பளிப்பு பிரச்சினையா மாறுவேடம் போடும்...”
“நான் வரட்டுமா?”
“போராடிக்கிறேனோ?”
“இல்ல. சில பிரச்சினைகள், சில விஷயங்கள் புரியப் புரிய பயமாய் இருக்கு.”
“என்னால உதவி பண்ண முடியுமா?”
“பொருளாதார சுதந்திரம் இல்லாத உங்களாலே, எனக்கு சுதந்திரம் வராது. அதுக்காக, உங்கள் மூலம் வரக்கூடாதுன்னு நினைக்கவில்லை. சொல்லப் போனால், வரணுமுன்னு நினைக்கிறேன்.”
சற்று நேரத்திற்கு முன்பு, ஓட்டலில் சும்மா காபி குடிக்கக் கூப்பிட்ட போது முகத்தைச் சுழித்து, கழுத்தை கேள்விக்குறி போல் வளைத்த இந்தப் பெண், ஏன் சரசத்துடன் தலை கவிழ்கிறாள் என்பது புரிய, அவன் மலைத்தும், மகிழ்ந்தும் நின்ற போது, மல்லிகா மெல்ல நடந்தாள். சரவணன் சிறிது நேரம் நின்றான். பிறகு சைக்கிளை வேகமாக உருட்டிக் கொண்டு, அவளருகே