(Reading time: 9 - 18 minutes)
Irulum oliyum
Irulum oliyum

நம்மோடயே அவள் சாகட்டும். போய் மகளைக் கூட்டிக் கொண்டு வாங்க” என்றாள்.

செல்லம்மா எதிர்பார்த்தது போல், பெருமாள் கோபப்படவில்லை. அடிக்க வரவில்லை. பித்துப் பிடித்தவர்போல் அப்படியே தலையில் கை வைத்தபடி ‘குத்துக்கால்’ போட்டு அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தார்.

‘என்னை, பாசத்தோடு பார்க்காதவள் படட்டும்’ என்று பழிவாங்கும் நெஞ்சத்தோடு கணவன் மதர்ப்பாக உட்கார்ந்திருக்கிறாரோ என்று கூட செல்லம்மா நினைத்தாள். “உடனே நீங்கள் போய் கூட்டி வாறீங்களா... நான் போகட்டுமா? எல்லாம் என் தலைவிதி. நீங்கள் சொன்னதை நான் அப்பவே கேட்டிருந்தால், இப்படி வந்திருக்காது” என்று முனங்கினாள்.

அப்போது, செல்லம்மா எதிர்பாராத ஒன்று நடந்தது. பெருமாளின் கண்களில் நீர் முட்டியது.

“என்னங்க இப்படி?” என்று செல்லம்மா அவர் கையைப் பிடித்ததும், அவரால் தாள முடியவில்லை. கேவிக் கேவி அழுதார். மனைவியின் கழுத்தில் முகம் புதைத்து, “என் பெண்ணுக்கா இந்த கதி... என் பெண்ணுக்கா” என்று அவர் புலம்பிய சத்தம் கேட்டு, குடித்தனக்காரர்கள் அங்கே கூடிவிட்டார்கள். சில்லறை விஷயங்களில் கவனம் செலுத்துவதைக் கவுரவக் குறைச்சலாகக் கருதும் ‘வீட்டுக்கார அம்மா’ கூட மேல்மாடி பால்கனியில் நின்று எட்டிப் பார்த்தாள். பிள்ளைகள் அங்கே “அப்பா, அப்பா” என்று சொல்லிக் கொண்டே கூடினார்கள். இதுவரை அழவைத்த அப்பா, இப்போது அழுவதைப் பார்த்ததும், ஏதோ பயங்கரமான ஒன்று நடந்திருக்கும் என்பதைப் பாவித்துக் கொண்டு பிள்ளைகள், ஆளுக்கொரு பக்கமாகப் புலம்பினார்கள். அதைரியப்பட்ட செல்லம்மாவே இப்போது அவருக்கு தைரியம் சொன்னாள்.

“என்னங்க சின்னப் பிள்ளை மாதிரி. நம்ம பொண்ணு நம்மகிட்ட வர்றதுக்கு சந்தோசப்படுறதை விட்டுப்புட்டு...”

பெருமாள், அவள் குரலை மேலும் பலமாக அழுது தடுத்தார். பின்னர் கேவிக்கொண்டே, “நீயும் புரிஞ்சுக்காம இருக்கியேடி. விதம் ஒரு புடவை கட்டி, தினம் ஒரு வகை சாப்பாடு சாப்பிட்டு வாழ்ற என் ராஜகுமாரியால, இந்த வீட்டுக்குள்ள எப்படி இருக்க முடியும்? அய்யோ, அவள் இங்க வந்து கஷ்டப்படுவதை இந்தக் கண்ணால பார்க்கிறதை விட, நான் செத்துப் போகலாம்டி” என்று சொல்லிக் கொண்டே, அவர் அழுகையை நிறுத்திய போது, அத்தனைக் குடித்தனக்காரர்களும் வாயடைத்துப் போனார்கள். வீட்டுக்குள் அடிதடி நடத்தினாலும் வெளியே வருவது போவது தெரியாமல் சாதுவாக இருக்கும் பெருமாளின் அழுகை, எல்லோரையுமே ஒரு குலுக்குக் குலுக்கியது. ஒரு எழுபது வயது ஆயாதான், நிதானமாகப் பேசினாள்:

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.