“இன்னா பெருமாளு, அய்யோ இப்படியா அழுவுறது? உன் வீட்டுக்காரி செல்லம்மாக் கூடத்தான் ராசாத்தி மாதிரி வாழ்ந்தாள். இப்போ இருக்கறத சரிக்கட்டி பூறாளே... அதான் வாழ்க்கப்பா. உன்னோட மவளும் சரிப்பண்ணுவா. சீக்கிரமா போய் பொண்ணை கூட்டிவா நாய்னா. மனுஷனுக்கு மானந்தான் முக்கியம் நாய்னா. இஷ்டப்படி வசதி இருந்தாலும் இஷ்டப்படி வாழ முடியாதுன்னா, அது வாழ்வா நாய்னா? தூ! கூழ் குடிச்சாலும், சொந்தக் கூழக் குடிக்கோணும். சீக்கிரமா போய் கூட்டி வா நாய்னா.... அய்யோ... எய்ந்திரு... எய்ந்திரு...”
பெருமாளுக்கு மூளை வேலை செய்யத் துவங்கியது. பெண்ணைப் போல் பெண்கள் மத்தியில் அழுததற்காக சற்று வெட்கப்பட்டு, விரக்தியாகச் சிரித்துக் கொண்டார். எழுந்து, துண்டை உதறிப் போட்டுக் கொண்டார். “இந்த நிலைமைக்குக் கொண்டு வந்த உன் அண்ணனை, என்ன பண்ணினாலும் தகும்டி” என்று மனைவியிடம் மீண்டும் பழைய முகத்தைக் காட்டிக் கொண்டு, ஆவேசமாகப் புறப்பட்டார்.
“கடவுளே! என் அண்ணனை இவரு ஏதாவது பண்ணிடப்படாதே”ன்னு செல்லம்மாள் கைகளை நெறித்துக் கொண்டாள்.
--------------
தொடரும்