ராமனுக்கு அவர் ‘வீக்’காக பதில் கொடுத்தது, பலத்தைக் கொடுத்தது. “யோவ், கஸ்மாலம், மல்லிகாவை விடுறியா, இல்ல வயித்தக் கீறட்டுமா?” என்று சொல்லிக் கொண்டு அவரை நெருங்கிய போது, வெளியே நின்ற சைக்கிள் ரிக்ஷாக்காரர் உள்ளே வந்தார்.
அவரும் மேனியெங்கும் ‘பச்சை’க்காரர். ராமனை நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டே, “ஏண்டா... சோமாறி... சின்ன மனுஷன் பெரிய மனுஷன் வித்தியாசம் வாண்டாம்? அவரோட பொண்ணை அவரு கூட்டிக்கினு போனா, உனக்கென்னடா கயிதே. இன்னொரு வாட்டி அவரைத் திட்டு பார்க்கலாம். மவனே, நெஞ்சில் கீறி, மஞ்சாச் சோத்தை வெளில புட்டுப் பூட்றேன்” என்று கர்ச்சித்த போது, “படா கில்லாடிங்க தாய்யா... பிளான்ல வந்திருக்கீங்கோ” என்று கூறிவிட்டு, ராமன் ‘சைட்’ வாங்கிய போது பெருமாளும், மல்லிகாவும், ரிக்ஷாவிற்கு அருகே வந்து விட்டார்கள். “ஏறும்மா” என்றார் அவர்.
மல்லிகா வீட்டுக்குள் திரும்பிப் பார்த்தாள். உள்ளே ஊடுருவிப் பார்த்தாள். வாசல் படிக்கட்டில் பார்வதி திபிரமையுடன், பின் தலையில் இரண்டு கைகளையும் பின்னி, விழி ஆடாமல், வெறித்த பார்வை மாறாமல், பைத்தியக்காரி போல் நின்றதைப் பார்த்த மல்லிகாவால் தாள முடியவில்லை. “அம்மா... அம்மா...” என்று கேவிக் கொண்டே அழுதாள். அந்த அழுகையைப் பார்த்ததும், பார்வதியும், நெருங்கி வந்து நின்று கொண்டு அவளைப் பார்த்தாள். ‘வந்திடும்மா, வந்திடும்மா’ என்று இதயம் வாய்க்கு ஆணையிட, மூளை அதற்குத் தாளிட்டது. ஆனால் கண்கள் மட்டும் யாருடைய ஆணைக்கும் கட்டுப்பட விரும்பாதது போல், நீரைக் கொட்டின.
எப்படி இருந்த மகள், எப்படியெல்லாம் இருக்கப் போகிறாளோ என்று கடந்த காலமும் எதிர்காலமும் நிதர்சனமான நிகழ்காலத்தில் சந்திக்க, பெருமாள், மகளை கைத்தாங்கலாக ரிக்ஷாவில் அமர்த்தி விட்டு, “நீ ஏம்மா அழுவுறே? உன்னை இந்த கதிக்கு விட்டவங்களை, நான் சும்மா விடப் போறதில்லை. மளிகைக்கடையும் அரிசி மாவு மில்லும் உன் பேர்ல தான் இருக்கு! வழக்குப் போட்டு வாங்குறேனா இல்லியான்னு பாரு” என்று சபதம் போட்டு விட்டு, ரிக்ஷாவில் ஏறினார். ரிக்ஷாக்காரர் பெடலை மிதிக்கப் போனார்.
மல்லிகா, கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, “நீங்கள் அப்பா மேல வழக்குப் போடுறதா இருந்தால் நான் உங்களோடு வரமாட்டேன் வரமாட்டேன்” என்று குழந்தை போல் விம்மினாள்.
பெருமாள், தன் மகளை பெருமையோடு பார்த்து விட்டு, அவள் முதுகில் தட்டினார். பிறகு “பிச்சைக்காரப் பயலுவ காசு, நமக்கெதுக்கும்மா” என்று சொன்னார். அதற்கு அவள், “அப்பாவை அப்படியெல்லாம் திட்டப்படாது” என்று கலங்கியவாறே சொன்ன போது, பெருமாள் குழந்தையானார். குலுங்கி அழுதார்.
“இன்னாய்யா... நீ குயந்த மாதிரி, அழலாமா? சரியான ஆளய்யா?” என்று சொல்லிக் கொண்டே,