Flexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 12 - சு. சமுத்திரம்
கணவன், அண்ணனை எதுவும் செய்துவிடப் போகிறாரோ என்று கண்கலங்க, வாசல் திண்ணையைப் பிடித்துக் கொண்டு நின்ற செல்லம்மாவுக்கு, மனம் மரண அவஸ்தைப்பட்டாலும், லேசான ஆறுதல். அண்ணனைச் சுற்றி எப்போதும் ஆள் இருக்கும். இவரால் அடிக்க முடியாது. அதோடு இவ்வளவு ரவுடித்தனம் செய்யும் இவரும், அண்ணனைக் கண்டதுமே, பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போகிறவர். ஒரு வேளை, இவர் கலாட்டா செய்து, இவரையே போலீசில் பிடித்துக் கொடுத்து... இருக்காது... இருக்காது. என் அண்ணனைப் பற்றி எனக்குத் தெரியும். அடிப்பதற்கு முதுகைக் காட்டினாலும் காட்டுவாரே தவிர, முதுகில் குத்த மாட்டார். ஒருவேளை, அண்ணன் இல்லாமல்... வேறு யாராவது இருந்து... அட கடவுளே...
தவித்துக் கொண்டிருந்த செல்லம்மாவுக்கு, முதலில் எதிரே வந்து கொண்டிருந்த ரிக்ஷா மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது. பிறகு அதிலிருந்து உருவங்களைப் பார்க்கப் பார்க்க ரிக்ஷா மறைந்து, பெருமாளும், மல்லிகாவும் மட்டுமே தெரிந்தார்கள். பின்னர் மல்லிகா மட்டுமே அவள் கண்களில் நிறைந்தாள்.
ரிக்ஷா வந்து நின்றவுடனேயே, செல்லம்மாவின் கண்களில் நீர் கீழே விழுந்தது. மல்லிகாவை, முதுகோடு சேர்த்து அணைத்து, தன் கைகளாலேயே இறக்கிவிட்டு, பின்னர் அவளை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டு “என் ராசாத்தி... என் ராசாத்தி... வந்துட்டியாம்மா...” என்று கதறினாள்.
சத்தங்கேட்டு, அவளின் பையன்களும், பெண்களும் வந்தார்கள். பிரசவத்திற்காக வந்திருக்கும் அவள் மூத்த மகள் சந்திரா, தங்கையின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதாள். ஏழைகள், தங்களுக்கு இஷ்டப்பட்டவர் வேதனையில் வேகும்போது, தங்களால் செய்யக்கூடிய ஒன்று, அந்த வேதனையைப் பகிர்ந்து கொள்வது போல், அழத்தான் முடியும் என்பது போல், அத்தனை பேரும் அழுதார்கள். இதனால், தெருக்கூட்டம் அங்கே திரண்டு வந்தது. உள்ளே இருந்த இருபது குடித்தனக்காரர்களும், அங்கே குழுமினார்கள். ‘டிக்னிட்டி’ பார்க்கும் ‘வீட்டுக்கார அம்மா’ கூட தெருவுக்கே, அதுவும் நடுத் தெருவுக்கே வந்து விட்டாள்.
பெருமாளுக்கு என்னவோ போலிருந்தது. படித்த பெண் முன்னால், இப்படியா, ‘ரீசன்ட்’ இல்லாமல் அழுவது? அவள் என்ன நினைப்பாள்? அதோடு, அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியவர்களே அழுதால்... அவர், வழக்கமாகக் கத்தாமல், படித்த மகளுக்கு மரியாதை கொடுப்பவர் போல் பேசினார்.
“நம்ம பொண்ணு... நம்மகிட்ட வந்திருக்காள். எங்கே வரணுமோ... அங்கே வந்திருக்காள். சந்தோஷப் படாமல் அழுதால் எப்படி...”
மல்லிகா, அவர்களை நிமிர்ந்து பார்த்தாள். அவர்கள் அனைவரும், அவளுக்கு முன்பு பார்த்தறியாத புது மனிதர்களாகத் தெரிந்தார்கள். அந்த எலும்புக் கூடுகளுக்குள்ளும், இதயங்கள்