இருப்பதை, அவள் தேடாமலே கண்டாள். அக்காளின் தோளில் கை போட்டுக் கொண்டு, அம்மாவின் கண்களை, இடுப்பில் செருகியிருந்த தன் கைக்குட்டையை எடுத்து, துடைத்தாள்.
எப்படியோ, மல்லிகா, அந்த முட்டு வீட்டுக்குள் வந்து உட்கார்ந்தாள். அவள் அக்காள், அவள் உட்காருவதற்கு முன்பே, தனது கல்யாணப் புடவையை, நன்றாக மடித்து அடுப்புத் திட்டை ஒட்டியிருந்த மந்திட்டில் அதைப் போட்டு பரப்பிவிட்டு, தங்கையை உட்காரச் சொன்னாள். தம்பி ஒருவன், மல்லிகாவிற்கு வெளியே இருந்து வாங்கிக் கொண்டு வந்த ஒரு ஓலை விசிறியை எடுத்து வீசினான். செல்லம்மா, தன் புது மகளையே பார்த்தாள். அவள் பிறந்த போது, குழந்தை எப்படி இருக்கிறது என்பதை அறியும் ஆவலில், பிரசவ மயக்கம் தீர்ந்த மறுநிமிடமே, எப்படி பார்த்தாளோ, அப்படிப் பார்த்தாள். பெருமாள், தலையில் கை வைத்து, யோசித்துக் கொண்டிருந்தார். இனிமேல் குதிரையை விடணும்... ‘பட்டையை’ ஒழிக்கணும்.
மல்லிகாவும், அவர்கள் அன்பில் கட்டுண்டு, மெய்மறந்து இருந்தாள். அந்த வீட்டைப் பார்த்து முன்பு முகஞ்சுழித்த அவளுக்கு, அந்த வீட்டு மனிதர்களைப் பார்க்கப் பார்க்க நெஞ்சமெல்லாம் நிறைந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு அவரவர், தத்தம் வேலைகளைப் பார்க்கத் துவங்கிய போது அவளுக்குத் தனிமை வாட்டியது. தான் செய்தது சரியா என்று கூடத் தோன்றியது. எங்கேயோ போய்விட்டதாக நினைத்த அவள் அம்மா, ஒரு மசால் தோசையுடன் வந்து மகள் முன்னால் காணிக்கை செலுத்துபவள் போல் நின்றதைப் பார்த்ததும், அவள், தாயாகி தாயாகாமல் போன அந்த காய்ந்தவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டாள். பிறகு, மசால்தோசையை வேண்டாமென்று சைகை செய்தாள்.
வருவோர் - போவோர், “இப்படியா செய்துட்டாங்க” என்போர், “இருந்தாலும் நீ வரப்படாது” என்போர் இப்படியாக பலர் வந்து பேசியதைக் கேட்டுக் கேட்டு, ஏதோ ஒரு பெரிய ஜனச்சங்கிலியில், தான் ஒரு வட்டமாக இருக்கும் லேசான - மிக லேசான பெருமிதத்தில் மல்லிகா அப்படியே உட்கார்ந்திருந்தாள்.
இரவு வந்தது. எங்கே படுப்பது? உள்ளே மூட்டைப் பூச்சிகள். வெளியே கொசுக்கள். ‘டன்லப் பில்லோ’ கட்டில் கிடையாது. மேலே மின்விசிறிக்குப் பதிலாக, ஒரு பெருச்சாளிதான் சுற்றிக் கொண்டு வந்தது. மல்லிகா தயங்கிக் கொண்டே நின்ற போது, ‘பிள்ளைத் தாய்ச்சியான’ அவள் அக்காள் சந்திரா, கோரப்பாயை விரித்து தன் கல்யாணப் பட்டுப் புடவையை, இரண்டாக மடித்து, கைகளால் தேய்த்து, பாயின் மேல் விரித்தாள். செல்லம்மாள், ஒரு கிழிந்த தலையணையை எடுத்து, வீட்டுக்காரரின் துண்டால் அதைச் சுற்றி, பாயின் விளிம்பில் வைத்தாள். பையன்கள் அக்காளுக்கு, யார் விசிறி வீசுவது என்ற சர்ச்சையில் ஈடுபட்டார்கள். ஒருவனுக்கொருவன், அடித்துக் கொண்டிருப்பான். வெளியே அப்பா இருப்பது தெரிந்து, வெறும் சர்ச்சையில் தான்