இருந்தார்கள். பெருமாளோ, இவர்கள் அடித்துக் கொண்டிருந்தாலும், கண்டிக்க மாட்டார். அவர் பிரச்சினை அவருக்கு. மல்லிகாவின் எதிர்காலத்தை நினைக்க நினைக்க அவருக்கு தனக்கு நிகழ்காலமே இல்லாதது போல் தோன்றியது. தாங்க முடியாத இதயச் சுமை ஒரு கிளாஸ் போட்டுட்டு வரலாமா... ஒரே ஒரு கிளாஸ்... இன்னைக்கு மட்டும்... நாளையில் இருந்து நிறுத்திடலாம்.
லாந்தர் விளக்கு அணைக்கப்பட்டது. அந்த இரவில், மல்லிகாவைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த குடித்தனக்காரர்கள், வெளித்தளத்தில், கணவன் மனைவி சகிதமாய், ரெட்டை ரெட்டையாகவும், பிள்ளைகள் சகிதமாகவும், வரிசை வரிசையாகப் படுத்தார்கள். மல்லிகாவும் படுத்தாள். அப்படியே தூங்கிப் போனாள். பட்டு மெத்தை கொடுக்காத சுகத்தை, அந்தப் பாய் கொடுத்தது. தப்பு... பாய் கொடுக்கவில்லை. அந்தப் பாயை விரித்த ஜீவன்களின் பாசம் கொடுத்தது.
நள்ளிரவு.
குடித்தனக்காரர்களின் குழந்தைகளில் ஒன்றோ, இரண்டோ இப்பாரி போட்ட போது, திடீரென்று தூக்கம் கலைந்து எழுந்தாள் மல்லிகா. கட்டில் மெத்தையில் படுத்திருப்பதாக நினைத்து எழுந்தவள், பாயைப் பார்த்துத் திடுக்கிட்டாள். அன்றைய தினம் நடந்தவை அனைத்தும் உறக்கம் கலைந்து ஒரு கணம் நிர்மலமாக இருந்த அவள் மனதில், உலுக்கிக் கொண்டே வந்து உட்கார்ந்தது. தலையில் இருந்து வந்ததா, வயிற்றில் இருந்து வந்ததா என்று இடம் தெரியாத அந்த சுமை நிகழ்ச்சிகளின் - அனலான நெருப்புக் கட்டிகள் அவள் இதயத்தில் சட்டென்று பட்டு சரியாகப் பிடித்துக் கொண்டது.
மல்லிகா, அம்மா பார்வதியை நினைத்த போது, முடங்கிக் கிடந்த செல்லம்மாவின் முகமே தெரிந்தது. அப்பா சொக்கலிங்கத்திற்குப் பதிலாக, பெருமாள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவளுக்கு, தியாகராய நகரில் இருக்கும் அப்பாவையும், அம்மாவையும் உடனே பார்க்க வேண்டும் போலிருந்தது. அவர்கள் கால்களைக் கட்டிக் கொண்டு கதற வேண்டும் போலிருந்தது. அவர்கள், இவள் தலையை ஆதரவாகக் கோதிவிட வேண்டும் போலவும் துடித்தாள். எதையும் எதிர்பார்க்காத பாசத்தின் உச்சக்கட்டத்திற்கு வந்தவளாய், அவள் செல்லம்மாவை எழுப்பினாள்.
கண்ணைக் கசக்கிக் கொண்டே எழுந்த செல்லம்மா “என்னம்மா” என்றாள்.
“அம்மாவிடம் போகணும்... அப்பாவைப் பார்க்கணும், இப்பவே பார்க்கணும்.”
“இப்போ எப்டிம்மா முடியும்...”
“அப்பாவைப் பார்க்கணும்... அம்மாகிட்ட போகணும்...”
“இன்னைக்கு மட்டும் பொறும்மா...”