சொட்டும் படியாகவும் கேட்டார். மனைவியை, இந்த மாதிரி அழவைக்கிற நிலைமைக்கு, அடித்துப் புரள்கிற அளவுக்கு, மல்லிகா கொண்டு போய் விட்டு விட்டாளே என்று அவருக்கு தன் வளர்ப்பு மகள் மீதும் கோபம் ஏற்பட்டது.
பார்வதி அவரைப் பார்த்து அழுது கொண்டே விளக்கினாள்.
“ராமனைக் கட்டிக்க முடியாதுன்னாள். உன் அம்மா வீட்டுக்குப் போயிடுடின்னு, ஒரு பேச்சுக்கு சொன்னேன். எங்கேயாவது போயிடுன்னு, ஒரு தாய்க்காரி கோபத்துல சொல்றது மாதிரி சொன்னேன். சொல்லியிருக்கக் கூடாதுதான். நான்.... பாவி... எந்த நேரத்துல அப்படிச் சொன்னேனோ... அந்த நேரத்துல... அந்த குடிகாரப் பாவி வந்திருக்கான். என் செல்லக்கண்ணை கூட்டிக்கிட்டு போயிட்டான். போயேண்டி, போயேண்டி, நான் செத்தாடி போயிடுவேன். அய்யோ, என் மனசு கேட்க மாட்டேங்குதே... கேட்க மாட்டேங்குதே...!”
“இப்ப அழுது என்னடி பிரயோஜனம்... இந்த புத்தி அப்பவே இருந்திருக்கணும்...”
“என் புத்திதான், இரப்பாளப் புத்தி. நான் படிக்காத முண்டம். அவளுக்குப் புத்தி... எங்க போச்சு? ‘இது என் வீடு, நீ வேணுமுன்னா போ. நான் போகமாட்டேன்’னு அவள் சொல்லக்கூடாதா? இது, அவள் வீடுதானே. அவள் எப்படிப் போகலாம்? எப்படிப் போகலாமுன்னேன்...”
“சரி எழுந்திரு. எல்லாம் இந்த ஓணான் பயலால் வந்த வினை. நாம ரெண்டு பேரும் போய், அவளைக் கூட்டிக்கிட்டு வருவோம். முகத்தைக் கழுவுடி. ராமனுக்கு உன்னைக் கொடுக்க மாட்டோமுன்னு சொல்லி, கூட்டிக்கிட்டு வரலாம், கிளம்புடி...”
பார்வதி, பெருமூச்சு விட்டுக் கொண்டே எழுந்தாள். அவள் முகம் திடுக்கிடுவதைப் பார்த்து சொக்கலிங்கம், அந்த முகத்திற்கு எதிர் திசையைப் பார்த்தார். அவளின் மூத்த அண்ணன் ராமசாமி பல்லைக் கடித்துக் கொண்டு நின்றார். இருவரும், தன் பிரசன்னத்தைப் பார்த்து விட்டார்கள் என்பது நிச்சயமானதும், வில் போல் கோணியிருந்த தன் வாய் வழியாக சொல்லம்புகளைத் தொடுத்தார்.
“ஏய்... பார்வதி... அவருக்குத்தான் அறிவில்லை, உனக்குமா இல்லை? உங்க சொந்த மகளாய் இருந்தால் வாசல்படியைத் தாண்டுவாளா? சரி... போனதே போனாள், தோளோடு தோளாய் வளர்த்த மச்சான் கிட்ட சொல்லாமல் போவாளா? சரி, அப்படியே போகட்டும்; போற வழியில், இவருகிட்ட சொல்லிட்டுப் போகலாமில்ல? ஏன் போகலே? எல்லாம் திட்டம். அப்பனும் அவளும் போட்ட திட்டம். ஏதாவது சாக்கு சொல்லி வெளியேறி, அப்புறம் வழக்குப் போட்டு, சொத்தைப் பிடுங்கி, என் தங்கச்சியை மொட்டையடிக்கணும் என்கிற திட்டம்.”
சொக்கலிங்கம் மைத்துனரை உதாசீனப்படுத்துபவர் போல் மனைவியிடம், “சரி, நேரமாகுது. உன் அண்ணன் பிரசங்கத்தை அப்புறமாய் கேட்கலாம். இப்போ புறப்படு” என்றார்.
பார்வதி புருஷனையும் அண்ணனையும் மாறி மாறிப் பார்த்தாள். இடது காலை நகர்த்தாமல்,