“‘தான் பெறணும் பிள்ளை, தன்னோட பிறக்கணும் பிறவி’ என்கிறது சும்மாவா? மல்லிகாவிற்கு தெரியாதுன்னு எங்களை நம்பச் சொல்றீங்களாக்கும். அவள் தம்பிகிட்ட, மூணு நாளைக்கு முன்னால கடைப் பயல்கள் சொன்னாங்களாம். அவன் சொல்லாமலா இருப்பான்? உம் மகளாய் இருந்தால் வராமல் இருப்பாளா? போதாக் குறைக்கு, உம் தங்கச்சி புருஷன் உம்மை கோர்ட்டில் நிறுத்தப் போறானாம்... கோர்ட்டுல நிக்கறதுக்கு உமக்கு பலம் வரதுவரைக்கும் காத்திருக்கப் போறானாம். அப்புறம் வழக்காம். மல்லிகாவும் நோட்டீஸ் அனுப்பறதுக்கு கையெழுத்து போடுறேன்னு சொல்லி விட்டாளாம்.”
சொக்கலிங்கம் பேசவில்லை. பேச விரும்பவும் இல்லை. பெரிய மைத்துனர் ராமசாமி, முறையோடு பேசுபவர் போல் எல்லாரையும் முறைத்துக் கொண்டே பேசினார்.
“எதுக்குப்பா வீணா கத்துறே? இன்னைக்கே ஒரு முடிவுக்கு வந்துடணும். அத்தானுக்கு ஒரு லாபத்தைப் போல, நஷ்டம் வந்துட்டால், பெருமாள், பார்வதியை கோர்ட்டுக்கு இழுக்கத்தான் போறான். இப்போதே ஒரு முடிவுக்கு வரணும்...”
“அத்தானுக்கு ஆயுசு நூறு. அப்படிச் சொல்லாதே” என்றார் சுப்பையா.
“நான் அந்த அர்த்தத்துல சொல்லலப்பா. பார்வதிக்கும் ஒரு துணை வேணும். ராமன் பயலை நம்ப முடியாது. முந்தா நாள் பாரு, என்னையே சோடா பாட்டிலை வச்சி அடிக்க வந்துட்டான். அதனால என் சின்ன மாமா பேத்தி இருக்காள் பாரு, கிராமத்துல, அவளை அத்தானுக்கு கட்டி வச்சிடலாமுன்னு நினைக்கிறேன். நீ என்ன சொல்றே?”
யாரும் எதுவும் சொல்லவில்லை. பார்வதி பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டாள். சொக்கலிங்கம், ‘முறைகெட்ட பயகிட்ட என்ன பேச்சு’ என்பது போல் குப்புறப் படுத்தார்.
அப்படியும், ஒரு இளம் பெண்ணுடன், தன்னை இணைத்துக் கொள்ளும் இதயத் துடிப்பை, அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. நினைக்க நினைக்க, அவருக்கு சுவையாக இருந்தது.
--------------
தொடரும்