வரும் அந்த அன்னைக்கு, மகள் சொன்ன சாதாரண உண்மை அசாதாரணமாகப்பட்டது. மகள் வந்த பிறகு, கணவன் குடிக்காமலேயே வருவதையும், வழக்கம் போல் பேச்சுக்குப் பேச்சு குதிரைகளை உதாரணமாகச் சொல்லாமல் இருப்பதையும், தன்னை அடிக்காமல் இருப்பதையும், சொல்லப் போனால், ஒரு நாள் தன் கன்னத்தைப் பிடித்து, ‘சொல்லத்தகாதபடி’ கொஞ்ச வந்ததையும், இவள், ‘இருந்த வயசுல எங்கேயோ போயிட்டு, இல்லாத வயசுல இப்படியா’ என்று சொல்லி, அவரை அப்புறப் படுத்தியதையும் நினைத்துக் கொண்டாள்.
உண்மைதான். மல்லிகா. அந்த புறச் சூழ்நிலைக்கு ஏற்ப மாறியும், மாற்றியும் வந்தாள். அவள் தந்தை பெருமாள், இப்போது வீட்டுக்கு இரண்டு ரூபாய் அதிகமாகக் கொடுப்பதைக் கேள்விப்பட்டு அகமகிழ்ந்தாள். தந்தை, தனக்கு இரவில் வந்ததும் ரகசியமாகக் கொடுக்கும் ‘கேக்’குகளையும் இதர ஸ்வீட்டுகளையும், அவள் பகிரங்கமாக, பிள்ளைத் தாய்ச்சியான சந்திராவிற்கும், இதர பிள்ளைகளுக்கும் பகிர்ந்து கொடுத்தாள். “என்னால் இது கட்டுப்படியாகாதுப்பா சாமீ! இந்த முட்டாப் பய மக்களும், மிட்டாய் தின்ன ஆரம்பித்தால் யானைக்கு அல்வா வாங்கிட்டு வந்த கதையாத்தான் முடியும்” என்று பெருமாள் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, எங்கேயோ போனார். நிச்சயமாக, வாய்க்குப் ‘பட்டை’ தீட்ட அல்ல.
ஞாயிற்றுக்கிழமைகளில், ஆண்களும், பெண்களுமாகச் சேர்ந்து ‘தாயப் பாஸ்’ ஆடுவதை முதலில் தொலைவில் இருந்தும், பிறகு பக்கத்தில் இருந்தும், ரசித்து விட்டு, இப்போது மல்லிகாவும் சேர்ந்து ஆடத் துவங்கினாள். சாப்பிடுவதற்கு மட்டும் ‘போர்ஷன்களை’ வைத்துவிட்டு, மீதி சகலத்திற்கும் களத்தை (முற்றம் : பொதுத்தளம்) பயன்படுத்தும் ஏழை எளியவர்கள், இளம் பெண்கள், இளைஞர்கள் முதலியோர் ஆயிரக்கணக்கான சினிமாக்களின் காதல் காட்சிகளை அலசிவிட்டு, அருகருகே படுத்தாலும், எந்த வித இச்சைக்கும் தங்களை விருந்தாக்காத பெரும் பண்பு, அவளைப் பெரிதும் கவர்ந்தது. கல்லூரிகளில் பெண்களைப் பார்த்தவுடனேயே ‘விசிலடிக்கும்’ பையன்களையும், மாணவிகள் மொத்தமாகப் போகும் போது தனியாக அகப்படுபவனைப் பார்த்துப் பேசும் கிண்டல் கேலிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கப் பார்க்க, இந்த நாகரிக மைனர்களும், ‘மைனி’களும், அவளுக்கு நாட்டின் எச்சங்கள் போலத் தோன்றின.
மல்லிகா பார்வையாளராக மட்டும் நிற்கவில்லை. அந்த ஏழைபாளைகளின் பிரச்சினைகளில் பங்காளியாகவும் மாறினாள்.
‘இட்லிக்கடை’ ஆயா தங்கம்மாவுக்கு இட்லிக் கணக்கை எழுதிக் கொடுத்தாள். கொத்தனார் வேலைக்குப் போகும் ராக்கம்மாவுக்கு கடிதங்களை எழுதிக் கொடுத்தாள். வாங்கும் சம்பளத்தில் பத்தில் ஒன்றை ஊரில் இருக்கும் சொந்தக்காரர்களுக்கு கடிதங்களாகச்