அந்த சகுனி ராமசாமியும் வந்தாரு. வந்ததும் வராததுமாய் அக்காளை, நன்றிகெட்ட நாயின்னும், கள்ளின்னும் கண்டபடி பேசினாரு. நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். முடியல. ‘எங்க அக்காவை பேசினால், இடுப்பை ஒடிச்சுடுவேன்’ என்றேன். உடனே அவன் ‘உன் அக்காதான் போயிட்டாள், உனக்கு எதுக்குடா இங்கே வேலை? இங்கே நடக்கிறதை அங்கே சொல்றதுக்காக இருக்கியா? மானமுள்ளவனாய் இருந்தால் போயேண்டா’ன்னான். நான் ‘சரிதான் போய்யா’ன்னுட்டு வந்துட்டேன். சரி பசிக்குது, இட்லி இருக்கா?”
செல்லம்மா, பதறிப் பதறிக் கேட்டாள்: “மாமா உன்னை பேசாத போது, நீ எதுக்குடா வந்தே...”
“முதல்ல உன்னை உன் அண்ணன்கிட்ட அனுப்பணும்மா. அக்காளை ராமசாமி கண்டபடி பேசுறான். மாமா தட்டிக் கேட்கல. அப்புறம் என்னை போடாங்கிறான். அதுக்கும் அவரு பேசாமல் இருக்கிறார். மவுனம் சம்மதமுன்னு தானே ஆகுது? அப்படிப்பட்ட மனுஷன் கடையில் எனக்கென்ன வேலை? கட்டுனவனுக்கு ஒரு கடை, கட்டாதவனுக்கு எத்தனையோ கடை. எங்க அக்காளை அவன் பேசின பேச்சுக்கு, ஒரு நாளைக்கு... இந்த ராமசாமியை கவனிக்கத்தான் போகிறேன். என்னைப் பேசினால் பேசட்டும். அக்காவை எப்படிப் பேசலாம்? இவள் கால் தூசிக்கு அவன் பெறுவானா?”
மல்லிகா, தம்பியையே வெறித்துப் பார்த்தாள். அவனைப் போகச் சொன்ன இடத்திற்கு, நான் போகக் கூடாது. தனக்காக வந்த தம்பியை, அவள் அழப் போகிறவள் போலவும், அழுது முடித்தவள் போலவும் பார்த்தாள்.
அவள் சிந்தித்தாள். ‘அதோடு என்னையும் அந்த ராமசாமி எதையாவது பேசி, அதையும் அந்த அப்பா சம்மதத்தோட கேட்டுக்கிட்டு இருந்தால், என்னால தாங்க முடியாது. சரி, சரவணனையாவது பார்க்கலாமா... வேண்டாம். கூடாது. முடியாது. என்னை தோளோடு தோளாய் எடுத்து வளர்த்த அப்பாவே என்னை ஒருத்தர் திட்டும் போது சும்மா இருந்தார் என்றால், பாசமேது? பந்தமேது? இந்த சரவணன் மட்டும், என் புதிய நிலையை தெரிந்ததும், என்னிடம் பாராமுகமாய் இருக்கமாட்டார் என்கிறது என்ன நிச்சயம்? எதுவும் இல்லாத ஏழைகளுக்கு இருக்கக் கூடிய ஒரே சொத்து தன்மானந்தான். அதையும் விட்டால் எப்படி? நூறு ரூபாய் நஷ்டப்பட்டாலும், எனக்கு ஐந்து ரூபாய் நீட்டிய இந்த அப்பா... எனக்காக வேலையை விட்டுட்டு, அதுவும் முதலாளி மாதிரி தனியா நடத்தின கடையை விட்டுட்டு வந்த தம்பி... அங்கே போகாதே, என்று சொல்கிற ஆயா, ராக்கம்மாள் இவர்கள் பாசத்தையே என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவங்க பாசத்தையும் வாங்கித் தின்னு வயிறு குமட்ட வேண்டாம்.’
மல்லிகா வீட்டிற்குள் போய், பட்டுப் புடவையைக் கொடுத்து விட்டு, நூல் புடவையைக் கட்டிக் கொண்டாள். கண் மையை அழித்துக் கொண்டாள். அவளின் அலங்காரம் எதுவுமே