Flexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 15 - சு. சமுத்திரம்
ஒவ்வொரு வாரமும், ஒரு குடித்தனப் பெண், பொதுத் தளத்தைப் பெருக்கி, மதில் போல் விளங்கும் ‘காவாயைக்’ கழுவி, குழாயடியில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றி, குளியலறையைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். காலையிலும், மாலையிலும் செய்ய வேண்டிய வேலை இது. இதற்கு ‘முறைவாசல்’ என்று பெயர்.
ஒரு நாள், செல்லம்மாவின் ‘முறை வாசல்’. அவள், மார்க்கெட்டுக்குப் போய்விட்டாள். சந்திரா, தன்னைப் பார்க்க வந்த புருஷனை வழியனுப்ப பஸ் நிலையத்திற்குப் போய்விட்டாள். இதர பிள்ளைகள் எங்கோ போய் விட்டன.
மல்லிகா, அந்த மாலைப் பொழுதில், குடித்தனக்காரப் பெண்களுடன், ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். ‘கால்வாய்’ நீர் வழிந்து கொண்டிருந்தது. களத்தில் தூசிகள் படிந்து கிடந்தன. மார்க்கெட்டுக்குப் போன செல்லம்மா, உடனே திரும்பிவிடுவாள் என்பதும், திரும்பியவுடனே, கால்வாயைக் கழுவி, தளத்தைத் தெளித்து, சகல வேலையையும் செய்துவிடுவாள் என்பதும், வீட்டுக்காரிக்குத் தெரியும். தெரிந்து கொண்டே, அவள் தெரியாதவள் போல சீண்டினாள். மாடியில் நின்று கொண்டே போர்ப் பிரகடனம் செய்தாள்.
“பேமானி ஜனங்க முறைவாசல் செய்யாமல் போனால் என்ன அர்த்தம்? இருந்தால் ஒழுங்கா இருக்கணும். இல்லாவிட்டால் எதுக்கு இருக்கணும்? சுத்தத்தோட அருமை இவங்களுக்கு எப்படித் தெரியும்? தெரிந்திருந்தால் இப்படி இருக்க மாட்டாங்களே. இன்னைக்கு அந்தக் கிழவி வரட்டும்.
மல்லிகா, சகப் பெண்களைப் பார்த்தாள். அவர்கள் தங்களைப் போன்ற ஏழைகள் சாகாமல் இருப்பதே தப்பு என்பது போல், அவளைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். பலவீனமாக நோக்கினார்கள். அந்த பலவீனத்தை தனது பலமாக எடுத்துக் கொண்ட வீட்டுக்காரி, இப்போது மல்லிகாவை நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டே மேலிருந்தபடியே கேட்டாள்:
“மல்லிகா இது என்ன, தியாகராய நகர் வீடுன்னு நினைக்கிறியா? அம்மா தான் முறைவாசல் பண்ணலன்னா நீ கூட பண்ணப்படாதா? பெரிய ராணின்னு நினைப்போ? மரியாதையா துடைப்பத்தை எடுத்து சுத்தம் பண்ணு. இல்லைன்னால், நாளைக்கே காலி பண்ணுங்கோ. சீச்சி பேமானி ஜனங்க. சேற்றுல புரள்றவங்களை வீட்டுல வச்சால் இப்படித்தான். சீச்சீ...”
மல்லிகாவிற்கு, கோபத்தை விட வருத்தமும், மற்ற பெண்களுக்கு வருத்தத்தை விடக் கோபமும் ஏற்பட்டன. மல்லிகாவிற்கு, ஏதோ ஒரு சோகம், ஏதோ ஒரு வெறி. மடமடவென்று எழுந்து, ஒரு மூலையில் கிடந்த பொதுச் சொத்தான ஒரு துடைப்பத்தை எடுத்துக் கொண்டு குழாயடியருகே, அவளைப் போல் காதறுந்து போய்க் கிடந்த ஒரு’பைட்டியையும்’ எடுத்துக் கொண்டு, சக பெண்களைப் பரிதாபமாகப் பார்த்தாள். அவள் கண்களில் தேங்கிய நீர் அந்தப்