(Reading time: 10 - 19 minutes)
Irulum oliyum
Irulum oliyum

பெண்களின் கண்களில் நெருப்பாக மாறியது. அவளது தவிப்பு, அவர்களிடம் கோபத்தனலாகப் போனது. அவளது திகைப்பு, அவர்களிடம் ஒரு தீர்மானமான முடிவாகப் போனது.

‘கொத்து’ வேலைப் பெண்ணான ராக்கம்மாள் எல்லோருக்கும் பொதுவாக, வீட்டுக்கார அம்மாவிடம் நிதானமாகக் கேட்டாள்:

“வீட்டுக்காரம்மா, நீ பண்றது கொஞ்சமும் நியாயமில்லை. யாரையும் இப்படி அட்டகாசமா பேசாதம்மா. அதான் சொல்லிப்புட்டேன்.”

‘இட்லி’ ஆயா இன்னொரு எதிர்க் கேள்வியைப் போட்டாள்.

“குயந்தே, நீ செய்றது நல்லா இல்ல. குயந்தே நல்லா இருக்கோமுன்னு திமிரா பேசாதே குயந்தே. நானு கூடத்தான் பர்மாவுல ஒரு பங்களா வச்சிருந்தேன். ஜப்பான்காரன் குண்டுக்குப் பயந்து ஓடிவரச்ச ஆம்புடையானையும் பிள்ளைகளையும் குண்டுக்குப் பறிகொடுத்துட்டு இங்கே வந்தவள் குயந்தே! பங்களாவும் மோட்டார் பைக்கும் வச்சிருந்த போது கூட, நானு யாரையும் மதிக்காமல் பேசுனதுல்ல. எனக்கே இந்த கதின்னா உனக்கு எந்த கதின்னு நெனச்சிப்பாரு குயந்தே. இந்தப் பச்சைக் குயந்தையை இப்படி அடாவடியா பாய்றதுக்கு எப்படிக் குயந்தே மனசு வருது?”

வீட்டுக்காரிக்கு ஆணவம், ஆத்திரமாகியது. எப்படி கெடக்கிறதுகள் எப்படி பேசுதுங்க. இதுவரைக்கும், ‘ஊட்டுக்காரம்மா, ஊட்டுக்காரம்மா’ன்னு வார்த்தைக்கு வார்த்தை பணிவோடு பேசுற சனியன்கள் எப்படிப் பேசுறது பாருங்க. இவள்களை இப்படியே விட்டு வைக்கப்படாது. முளையிலேயே கிள்ளணும். முளையோடு கிள்ளணும்.

வீட்டுக்காரி, அவர்களைக் கிள்ளுவது போல் பேசினாள்.

“இது நல்லா இல்லை, சொல்லிவிட்டேன். கூட்டமா நின்று, எதிர்த்துப் பேசுற அளவுக்கு தெனாவட்டா? மரியாதையா எல்லாரும் காலி பண்ணிடுங்கோ. அவளைப் பேசினால், உங்களுக்கு என்ன வந்துட்டுது?”

ராக்கம்மாள், சற்று உரக்கவே பேசினாள்: “மல்லிகாவை பேசினால், எங்களைப் பேசினது மாதிரி. எங்களைப் பேசினால் மல்லிகாவை பேசினது மாதிரி...!”

“யூனியன் போடுறீங்களா?”

“அப்படித்தான் வச்சுக்கோயேன்.”

“என்னடி... நீங்க... உங்க மனசுல என்ன தான் நினைக்கிறீங்க? உங்க ஒற்றுமைக்கு பணியுறவள் நானுல்ல. நாளைக்கே வீட்டை காலி பண்ணியாகணும். துடப்பக் கட்டை மூஞ்சிங்க வந்துட்டாளுங்க.”

“டீ போட்டு பேசினே, செருப்பு பிஞ்சிடும்.”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.