Flexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 18 - சு. சமுத்திரம்
ஒரு வாரம் ரகளை இல்லாமலே ஓடியது.
மல்லிகா, பெண்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த போது, வெளியே இருந்து வந்த அவள் தந்தை பெருமாள், வீட்டுக்குள் போனவுடனேயே, அம்மாவுடன் கோபமாகப் பேசுவது கேட்டது. மல்லிகா வீட்டுக்குள் போனாள். செல்லம்மா, புருஷனிடம் எதிர்க் கேள்விப் போட்டாள்.
“எங்க அண்ணன் இப்படிச் செய்ய மாட்டார்... மாட்டார்.” செல்லம்மா திருப்பிக் கத்தினாள்.
“உங்க அண்ணனேதாண்டி... சட்டாம்பட்டியில் லிங்கராஜாவோட தங்கச்சியாம். வயது பதினேழாம். இந்த சோம்பேறிப் பயல் கட்டிக்கப் போறான். நிச்சய தாம்பூலம் ஆயிட்டு. இந்த அநியாயத்தை முருகன் கோவிலுல வச்சு நடத்தப் போறாங்களாம்... பன்னாடப் பயலுக... கட்டுறதே கட்டுறாங்க... கோயிலுல வச்சா கட்டணும்?”
“எங்கண்ணாவா... அட... கடவுளே...”
“உன் அண்ணனே தாண்டி... நீ அடிக்கடி சொல்லுவியே... ‘எங்கண்ணா உங்களை மாதுரி குடிகாரன் இல்ல... குதிரைக்காரன் இல்லே’ன்னு. இப்போ சொல்றதக் கேளுடி. கெட்டப் பழக்கம் உள்ளவன் அயோக்கியனும் இல்ல... அது இல்லாதவன் யோக்கியனும் இல்ல... ஒரு பதினேழு வயசுப் பெண்ணை... பெற்ற மகள் மாதுரி நினைக்க வேண்டிய வெள்ளரிப் பிஞ்சை... இந்த கழுதப்பய திங்கப் போறானாம். பாவம்... அந்தப் பொண்ணு... சித்திக்காரியோட கொடுமை தாங்க முடியாம... எப்படியாவது... ஊர்ல இருந்து ஒழிஞ்சா சரின்னு பேசாம இருக்காம். புலிக்குப் பயந்து ஓநாய்கிட்ட போன கதை... இப்போ... சொல்லுடி... ‘பாயிண்ட்’ இருந்தும் சொத்துக்கு ஆசைப்பட்டு அவன் மேல வழக்குப் போடாத உன் குடிகாரப் புருஷன் யோக்கியனா? இல்ல... சொத்து நமக்கு வரக் கூடாதுன்னு... ஒரு சின்னஞ்சிறிச அழிக்கிற உன் அண்ணனா? ஏண்டி வாய் மூடிவிட்டாய்? இவன் கெட்ட கேட்டுக்கு... கல்யாண நோட்டீஸ் அடிச்சிருக்கான்... மல்லி... உன் அம்மாவுக்கு... இதை படித்துக் காட்டும்மா.”
பைக்குள் ‘சஸ்பென்சாக’ வைத்திருந்த கல்யாண அழைப்பிதழை, பெருமாள் மகளிடம் நீட்டினார். அதை தனக்குள்ளேயே படித்த மல்லிகா, அந்த எழுத்தை நம்பாதவள் போல்,