Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (முதல் பாகம்) - 03 - சரோஜா ராமமூர்த்தி
1.3. கருகும் எண்ணங்கள்து
கும்மட்டியில் ஜ்வாலை விட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்பு அந்தத் தேதித் தாளை அப்படியே பஸ்மமாகப் பொசுக்கி விட்டது. அது கருகிச் சாம்பலாகிப் போவதை பவானி பார்த்துக் கொண்டே உட்கார்ந்து கொண்டிருந்தாள். அந்தப் பதினைந்தாவது எண் கருகிப்போனதே ஒழிய அவள் மனத்துள் பதிந்து போன அந்தப் பழைய நினைவுகள், அடுப்பில் காற்று வேகத்தில் சுழன்று எரியும் தீயைப் போலச் சுழன்று எழுந்தன.
நான்கு வருஷங்களுக்கு முன்பு சித்திரை மாசத்தில் ஒருநாள். அன்று பதினைந்தாம் தேதி. அது தமிழ் மாசத்தின் பதினைந்தாம் தேதியோ அல்லது ஆங்கில மாசத்தின் பதினைந்தாவது நாளோ? அதைப்பற்றி அவ்வளவு தெளிவாகப் பவானிக்கு நினைவு இல்லை. அன்று அவள் கணவன் வழக்கத்தை விட சீக்கிரமாகவே எழுந்து விட்டான். பவானியின் மனமும் கடந்த பத்து தினங்களாகவே சரியாக இல்லை. இனிமேல் நம்பிக்கைக்கு இடமில்லை' என்று வைத்தியர் கூறி இருந்தார். ”இருதயம் பலவீனமாக இருக்கிறது; இருமினால் சளியுடன் ரத்தமும் கலந்து வருகிறது. இனிமேல் நான் என்ன செய்ய முடியும்?' என்று வைத்தியர் கூறியதைக் கேட்ட பவானியின் நெஞ்சம் துயரத்தால் வெந்தது. அவளுடைய மனம் துண்டங்களாகப் பிளந்து சிதறுவது போல் இருந்தது.
"டாக்டர்!" என்றாள் வேதனை தொனிக்கும் குரலில். டாக்டர் சிறிது நேரம் கையிலிருந்த ஸ்டெதஸ் கோப்பைச் சுழற்றிக் கொண்டே நின்றிருந்தார். இருபத்தைந்து வயது கூட நிரம்பாத பூங்கொடியாகிய அவள், இனிமேல் கணவனை இழந்து தனித்துத்தான் நிற்க வேண்டுமா? பிறைமதி போன்ற அவளுடைய நெற்றியில் வட்ட வடிவமாகத் துலங்கும் அந்தக் குங்குமம் அழிந்து தான் போக வேண்டுமா?
டாக்டர் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பவானி நீர் மல்கும் கண்களுடன் அவரை ஏறிட்டுப் பார்த்தாள். ”டாக்டர்! எப்படியாவது என் கணவரைக் காப்பாற்றி எனக்கு மாங்கல்யப் பிச்சை தாருங்கள்" என்று தன் மலர் போன்ற கரங்களை ஏந்தி அவரிடம் பிச்சை கேட்டாள் அந்தப் பேதை. டாக்டரும் பிறப்பு இறப்பு என்கிற இயற்கையின் நியதிகளுக்கு உட்பட்ட ஒரு மனிதப் பிறவிதான் என்பது பவானிக்கு மறந்து போய் விட்டது. பாவம்! வாழ்க்கையின் இன்பக் கோட்டில் நிற்க வேண்டியவள் துன்பத்தின் எல்லையைக் காணும்போது தடுமாறுவது இயற்கைதானே? விழிகளின் கோணத்தில் துளித்த நீரைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே அவர். “நான் என்ன அம்மா செய்ய முடியும்? உயிருக்கு உடையவனாகிய அந்தக் கடவுள் கருணை வைத்தால் உன் கணவன் பிழைத்து எழலாம். என்னால் ஆனவரைக்கும் முயன்று பார்த்தாகி விட்டது" என்றார்.