Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (முதல் பாகம்) - 04 - சரோஜா ராமமூர்த்தி
1.4. அண்ணனும் தங்கையும்
அதன் பிறகு கல்யாணமும் பார்வதியும் அவளுக்கு எவ்வளவோ உதவி செய்தார்கள். ஊரிலிருந்து பவானியின் தமையனும், அவன் மனைவியும் வந்தார்கள். அருகில் இருந்து எல்லாக் கிரியைகளையும் செய்து முடித்தார்கள். பவானியின் கணவன் இறந்து பதினைந்து தினங்கள் வரையில் யாருமே எதுவுமே பேசவில்லை . ஒரு வழியாக எல்லாம் முடிந்த பிறகுதான் பவானிக்குத் தன் தனிமையைப் பற்றி நினைவு வந்தது.
கொல்லைத் தாழ்வாரத்தில் உட்கார்ந்து குழந்தைக்குச் சாதம் ஊட்டிக் கொண்டிருந்த அவள் அருகில் அவள் தமையன் நாகராஜன் வந்து உட்கார்ந்து கொண்டான் .
மெதுவான குரலில் அவனாகவே பேசவும் ஆரம்பித்தான்.
”பவானி! இனி மேல் நீ என்ன பண்ணப் போகிறாய்?" என்று கேட்டான்.
பவானி. விழிகளில் கண்ணீருடன் அண்ணனை ஏறிட்டுப் பார்த்தாள்.
"என்ன பண்ண வேண்டும் அண்ணா நீதான் சொல்லேன்?'
”நான் என்னத்தைச் சொல்வது? நீயாகவே ஏதாவது சொல்லுவாய் என்று பதினைந்து நாளாகப் பொறுத்துப் பார்த்தேன். நீ ஒன்றுமே பேசவில்லை. எனக்குக் கேட்க வேண்டிய கடமை ஒன்று இருக்கிறதல்லவா?"
ஆரம்பத்தில் அன்புடனும், அனுதாபத்துடனும் பேச ஆரம்பித்த அவன் படிப்படியாகக் கோபத்துடன் பேச ஆரம்பித்தான்.
"உனக்கு இந்த நெஞ்சழுத்தம் ஆகாது. கூடப் பிறந்தவனை அண்டித்தான் இனிமேல் இருந்தாக வேண்டும்”, என்கிற பாவம் தொனிப்பதாக இருந்தது அவன் பேச்சில்.
அவன் வெடுவெடுவென்று பேசியதும் பவானியின் முகம் வாட்டமடைந்தது. மனதுக்குள்