Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (முதல் பாகம்) - 06 - சரோஜா ராமமூர்த்தி
1.6. கொம்பும் கொடியும்
நாகராஜன் ஊருக்குக் கிளம்பு முன் ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துத் தங்கையிடம் கொடுத்தான்.
"எதற்கு அண்ணா இது? என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறதே. தேவையானால் எழுதி வாங்கிக் கொள்கிறேன்" என்றாள் பவானி.
”இருக்கட்டும் பவானி. இன்னும் பத்து நாட்களில் பாலுவுக்குப் பள்ளிக் கூடம் திறந்து விடுகிறார்கள். புஸ்தகம் வாங்கிச் சம்பளம் கட்ட வேண்டாமா? வைத்துக் கொள்."
பவானி சிரித்தாள்.
"மருமகன் பெரிய படிப்பு படிக்கிற மாதிரி தான் உன் எண்ணம். ஒண்ணாவது படிக்கிறவனுக்குப் புஸ்தகம் வாங்க நூறு ரூபாய் வேண்டுமா என்ன?"
பவானி இப்படி ஒவ் வொரு விஷயத்துக்கும் தர்க்கம் செய்து பேசுவது கோமதிக்குப் பிடிக்கவில்லை. புருஷன் போய் விட்டான். பிரமாதமாகச் சொத்து ஒன்றும் அவன் வைத்து விட்டுப் போகவில்லை. கூட வருவதற்கு ஆயிரம் ஆட்சேபணைகள் சொல்லிவிட்டாள். பள்ளிக் கூடம் திறந்தால் இருக்கட்டும் என்று பணம் கொடுத்தால் ”இது எதற்கு?' என்கிறாள். கர்வம் பிடித்தவள் என்று நினைத்து கோமதி கணவனைக் கோபமாக விழித்துப் பார்த்தாள்.
இடையில் அடுத்த வீட்டிலிருந்து கல்யாணம் வந்தார். வந்தவர் பேசாமல் இருந்தாரா? அப்படி இருப்பது தான் மனித சுபாவமே இல்லையே!
'என்ன ஸார்! ஊருக்குக் கிளம்புகிறீர்களா?" என்று கேட்டு வைத்தார் .
"ஆமாம் ஸார்! வந்த வேலை ஆயிற்று. கிளம்ப வேண்டியதுதானே?" என்று சலிப்புடன் நாகராஜன் கூறினான்.