Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (முதல் பாகம்) - 07 - சரோஜா ராமமூர்த்தி
1.7. மூர்த்தி வருகிறான்!
அவள் கண் எதிரே சுவரில் காணப்பட்ட அந்தப் பதினைந்தாம் தேதி தான் அவள் மனத்துள் எத்தகைய சிந்தனைகளை எழுப்பிவிட்டது? பழைய நினைவுகளில் லயித்துப் போய் உட்கார்ந்திருந்த பவானி, அடுப்பில் பால் பொங்கி வழிவதைக் கூடக் கவனிக்கவில்லை. கல்யாணராமன் கொடுத்த பால் 'சுரு சுரு' வென்று பொங்கி, பாதிக்கு மேலாக அடுப்பில் வழிந்து போன பிறகு தான் பவானி தன் சுய உணர்வை அடைந்தாள்.
அடுப்பிலிருந்து பாலை இறக்கிக் காப்பி போட்டு முடித்தவுடன், பாலு கொல்லைப் பக்கத்தில் இருந்து பல் தேய்த்துக் கொண்டு உள்ளே வந்தான். அம்மாவின் அருகில் சென்று உட்கார்ந்து அவள் கொடுத்த காப்பியை வாங்கிக் குடித்தான். சிறிது நேரம் இருவருமே பேசாமல் இருந்தார்கள். பவானி மகனின் முகத்தை ஆசையுடன் பார்த்தாள்,
”பாலு! உனக்கு எத்தனாம் தேதி பள்ளிக்கூடம் திறக்கிறார்கள்?" என்று கேட்டாள்.
"ஜுன் மாசம் பன்னிரண்டாம் தேதி திறக்கிறார்கள் அம்மா. மே மாசம் பத்து தேதிக்குள் - ரிஸல்ட்' சொல்லி விடுவார்கள்."
அப்போ நீ பாஸ் பண்ணி விடுவாயோ இல்லையோ? கணக்கிலே நீ புலியாயிற்றே. அதனாலே கேட்கிறேன்" என்று பாதி கேலியாகவும், பாதி கவலையுடனும் விசாரித்தாள் பவானி.
பாலு கன்னங் குழியச் சிரித்தான். *ஓ! பாஸ் பண்ணி விடுவேனே ! கணக்கெல்லாம் சரியாகப் போட்டிருக்கிறேன். சமூக நூலில் நான் தான் முதலாகப் பாஸ் பண்ணுவேன். சரித்திரம் அப்படியே ஒரு கேள்வி விடாமல் எழுதி இருக்கேன். அதோடே அம்மா, வாத்தியார்களுக்கெல்லாம் என் பேரிலே கொள்ளை ஆசை. அவர்களுக்கு இடைவேளையின் போது நான் போய் டீ வாங்கி வந்து கொடுப்பேன். கிளாஸிலே பானைத் தண்ணீர் பிடித்து வைத்து கண்ணாடித் தம்ளரை அலம்பி சுத்தமாக வைப்பதும் நான் தான். நம் வீட்டிலிருந்து உனக்குத் தெரியாமல் இரண்டு ஏலக்காய்களை எடுத்துப்போய்த் தட்டி அதிலே போட்டு வைத்து விடுவேன். நல்ல பங்குனி மாசத்து வெயில் வேளையிலே ஏலக்காய் போட்ட ஜலத்தை சாப்பிட்டு என்னை எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பார்கள். கவனித்தும் மார்க்குகள்