Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (முதல் பாகம்) - 09 - சரோஜா ராமமூர்த்தி
1.9. மொட்டைக் கடிதம்....!
வாசல் திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த கல்யாண-ராமன். மூர்த்தி அடுத்த வீட்டுக்குள்ளிருந்து வெளியே வருவதைப் பார்த்து திடுக்கிட்டார்! மூர்த்தி ஒருவரிடம் அனுதாபம் காட்டுகிறான் என்றால், அதில் சுயநலம் கலந்து இருக்குமே தவிர, தன்னலமற்ற தியாக உணர்ச்சி என்று அதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஐந்தாறு வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் கல்யாணத்தின் நினைவுக்கு வரவே அவர் மனம் மேலும் வேதனையில் ஆழ்ந்தது.
மூர்த்திக்கு அப்போது வயது இருபத்தைந்து இருக்கும். பசுமலையிலிருந்து அடுத்த டவுனில் இருக்கும் காலேஜுக்கு அவன் சைக்கிளில் போய் வருவான். அவன் படிக்கும் காலேஜிலேயே அந்த ஊர்ப் பெண்ணொருத்தி படித்துக் கொண்டிருந்தாள். அவள் தினமும் மாட்டு வண்டியில் காலேஜுக்குப் போகிற வழக்கம். குடும்பத்துக்கு மூத்த பெண்ணாக இருந்ததாலும், பெற்ற தகப்பன் இல்லாததாலும் அவள் படித்து வேலைக்குப் போய்க் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவள் தலையில் விழுந்திருந்தது. ஆகவே, அவள் அந்த எண்ணத்தில் உறுதியாக நின்று படித்து வந்தாள்.
மாட்டு வண்டி கிராமத்தின் எல்லையை அடைந்து டவுனுக்குப் போகும் ரஸ்தாவை அடைந்ததும், எங்கிருந்தோ மாயமாகக் குறுக்கு வழியாக வந்து மூர்த்தி சைக்கிளுடன் அவள் எதிரில் காட்சி அளிப்பான். பலரக சினிமாப் பாட்டுக்களையும், பாரதியின் காதல் கவிதைகளையும் பாடித் தீர்ப்பான்.
நம்முடைய செந்தமிழ் மொழியிலே அவனுக்கு ஏற்பட்ட அக்கறை கொஞ்ச நஞ்சமில்லை. அகநானூறில் காதலைப் பற்றி எத்தனை பாட்டுக்கள் இருக்கின்றன என்று அறிய அவனுக்கு அக்கறை ஏற்பட்டது. பாரதியாரின் குயில் பாட்டை அவன் தலை கீழாக ஒப்புவிக்கப் பயிற்சி செய்து கொண்டான். இவனுடைய காதல் வேதனையும், பைத்தியக்காரத் தனமான