”பரிதாபமாக இருக்கிறதா? உம்...ஏண்டா . ! அவள் அப்படியெல்லாம் தன்னைப் பிறத்தியார் பார்த்துப் பரிதாபப் படும்படி நடந்து கொள்ள மாட்டாள். அவளைப் போல துன்பத்தை விழுங்கிக் கொள்ளும் சக்தி யாருக்குமே கிடையாதுடா. அதெல்லாம் அவளோடு போகட்டும். நீ பேசாமல் வேலையைப் பார்த்துக் கொண்டு போ."
”எங்கே மாமா போகிறது? என் ஆபீஸிலே என்னை மதராஸ் ராஜ்யத்துக்கு டிராவலிங் ஸேல்ஸ் மென்னாகப் போட்டிருக்கிறார்கள். என் ஜாகை இனி மேல் இங்கேதான். மாசம் - மாமியிடம் எழுபது ரூபாய் என் சாப்பாட்டுக்காகக் கொடுத்து விடுவேன் . பெற்றவர்களைப் போல் என்னை வளர்த்தவர்களை விட்டு எங்கே போகிறது!"
கல்யாணம் மூடியிருந்த கண்களைத் திறந்து அவனை நேருக்கு நேராகப் பார்தார். பிறகு கண்டிப்பு நிறைந்த குரலில்,
"உன்னை யாரடா ஊரை விட்டுப் போகச் சொன்னது? பிறத்தியார் வம்பிலே தலையிடாமல் உன் வேலையைக் கவனித்துக் கொண்டு இரு என்றுதானே சொன்னேன்" என்றார்.
"மாமா எப்பொழுதும் இப்படித்தான். அவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு மூர்த்தி மேலும் அவரிடம் பேச்சை வளர்த்தாமல் திண்ணையில் படுத்துத் தூங்க ஆரம்பித்தான்.
--------------
தொடரும்