Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (முதல் பாகம்) - 10 - சரோஜா ராமமூர்த்தி
1.10. விசிறிக் காம்பு
குழந்தை பாலுவுக்குப் பிடிக்குமே என்று செய்து வத்திருந்த முருங்கைக்காய் சாம்பாரும் உருளைக் கிழங்கு பொடிமாசும் சமையலறையில் அடுப்பின் கீழ் ஆறிப் போய்க் கொண்டிருந்தது. பவானி கன்னத்தில் கையை ஊன்றித் தூணில் சாய்ந்து உட்கார்ந்து விட்டாள்.
ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த பாலு விசிறிக் காம்பால் பட்ட அடிகளைத் தடவிப்பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். தெருவிலே சடுகுடு ஆடினால் தண்டனை. குளத்துக்குப் போனால் அடி. கிணற்றில் இறங்கினால் உதை. பள்ளிக்-கூடம் திறந்திருந்தால் இருக்கவே இருக்கின்றன புஸ்தகங்களும் வாத்தியார்களும்! இவ்வளவு பெரிய லீவைத் தந்து விட்டு அதைக் கழிப்பது எப்படி என்று சொல்லித் தராமல் இருக்கிறார்களே என்று நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தான். வயிற்றில் பசி. சற்று முன் உள்ளேயிருந்து வந்த முருங்கைக்காய் சாம்பாரின் வாசனை மூக்கைத் துளைத்தது. சாம்பார் சாதம் சாப்பிட வேண்டும் என்று அவன் நாக்கில் ஜலம் ஊறிற்று. ஆனால் பவானி அவன் நின்றிருந்த பக்கம் கூடத் திரும்ப வில்லை. என்னவோ பெரிதாக நடந்து விட்டதுபோல் முகத்தை 'உர்' ரென்று வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள்.
பாலுவுக்குக் கால்கள் வலி எடுக்கவே மெதுவாக ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டான். பவானியின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. ஊராரின் கடுஞ்சொற்கள் அவள் நொந்த மனத்தில் வேல் கொண்டு குத்தித் துளைத்தன.
பாலு தாயைக் கவனித்துக் கொண்டே ஊஞ்சலில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தான். பசியினால் ஏற்பட்ட களைப்பினால் அவன் அயர்ந்து தூங்கிப் போனான். பாலுவின் உள்ளம் விழித்துக் கொண்டது. பசுமலையை விட்டு அவனும் அவன் அம்மாவும் ரயில் ஏறி சென்னைக்குப் போகிறார்கள். அங்கே ரயிலடியில் அவனுக்குப் பிரமாதமான வரவேற்பு மாமா நாகராஜனும், மாமி