Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (முதல் பாகம்) - 11 - சரோஜா ராமமூர்த்தி
1.11. புதுப் பள்ளிக்கூடம்
சற்று முன் விசிறிக் காம்பால் பவானி தன்னை அடித்ததை பாலு அடியோடு மறந்து விட்டான். அதைப் போலவே மகன் செய்த துஷ்டத்தனத்தைப் பவானி அறவே மறந்து. அவனை உபசரித்து உணவு பரிமாறினாள்.
பவானி குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பாலுவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். எலுமிச்சை வண்ண உடலும், அகன்ற பெரிய விழிகளும், சுருள் சுருளான கேசமும் கொண்ட அந்தப் பாலகன் உண்மையிலேயே அழகானவன். துரு துருவென்று பார்க்கும் அந்தப் பார்வையில் அவன் துடுக்குத் தனம் எல்லாம் தெரிந்தது . இப்படி அழகான ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து வளர்ப்பதே ஒரு பேறு என்று அவள் நினைத்தாள். ஆனால் ஊரார் அதை ஒப்புக் கொள்கிறார்களா? எப்படியாவது பாலுவை ஒரு நல்ல பள்ளிக் கூடத்தில் சேர்த்து விட்டால் அவன் விஷமங்களும் துடுக் குத்தனங்களும் ஓய்ந்து போகும். இந்தப் பஞ்சாயத்துப் பள்ளிக்கூடத்தில் குழந்தைகளைக் கவனிப்பதே இல்லை என்று நினைத்துக் கொண்டாள்.
பாலு சாப்பிட்டு விட்டுத் தட்டை எடுத்துக் கொண்டு கொல்லைப் புறம் சென்று கை அலம்பிக் கொண்டு உள்ளே வந்தான் வந்தவன் தாயின் இலையைக் கவனித்து விட்டு, "என்ன அம்மா! குழம்புச் சாதத்தை அளைந்து கொண்டு எந்தக் கோட்டையையோ பிடிக்க முயன்று கொண்டிருக்கிறாயே. சாதம் ஆறிப்போய் இருக்குமே" என்று கேட்டான். பவானி அதற்கு ஒன்றும் பதில் கூறவில்லை.
"ஏண்டா அப்பா! பள்ளிக்கூடம் திறக்க இன்னும் பதினைந்து தினங்கள் தானே இருக்கிறது? உன்னை வேறு பள்ளிக் கூடத்தில் சேர்க்க வேண்டுமே. பேசாமல் இருக்கிறாயேடா?" என்று கேட்டாள்.
பாலுவிற்குப் புதுப் பள்ளிக்கூடம் என்றதும் உற்சாகம் பொங்கி வந்தது. அவன் தாயின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு, "ஓ! அதுக்கென்ன அம்மா!